எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, இப்போ எதிர்ப்பா? திமுகவுக்கு விஜய் கேள்வி
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் ஊருக்குள் வருவதற்கு எனக்கு ஏன் தடை என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராடி வருகிறார்கள்.
இதுவரை இந்த போராட்டக் குழுவினரை 35 அரசியல் கட்சியினர் பார்த்து பேசியிருந்த நிலையில் 36 ஆவது நபராக விஜய், போராட்டக் களத்திற்கு வந்துள்ளார். அவர் அங்குள்ள அம்பேத்கர் திடலில் பேசுவதற்குத்தான் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் ஊருக்குள் நுழைய விஜய்க்கு அனுமதி வழங்கப்படவில்லை. பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தின் திடலில் சந்திக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்பேரில் 12 மணி முதல் 1 மணி வரை அனுமதியானது வழங்கப்பட்டது.
அதன்படி விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து காலை 8 மணிக்குக் கிளம்பினார். பரந்தூர் வந்த அவருக்கு வழியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்குப் பிரச்சார வாகனத்தில் வந்திருந்தார்.
மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் விஜய் பேசுகையில் 8 வழிச்சாலை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள், அதே நிலைப்பாட்டைத் தானே பரந்தூரில் எடுக்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதா. எனக்குப் புரியவில்லையே!
ஆட்சியாளர்களான உங்கள் நாடகத்தை பார்த்துவிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். உங்கள் வசதிக்காக விவசாயிகளுடன் நிற்பதும் நிற்காமல் இருப்பதும் போன்ற நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். நம்பும்படி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகளாயிற்றே!

எனவே பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆய்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்யுங்கள். விவசாய நிலங்கள் இல்லாத இடத்தில் உங்கள் விமானநிலையத்தைக் கொண்டு வாங்க. வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம், அதன் பேரில் நடக்கும் அழிவு மக்களைப் பாதிக்கும்.
சட்டத்திற்குட்பட்டு எல்லா வழிகளிலும் நிற்பேன். உங்கள் எல்லாரையும் உங்கள் ஊருக்கே வந்து சந்திக்கத்தான் நினைத்தேன். ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வர தடைனு தெரியவில்லை. தவெக தொண்டர்கள் துண்டு பிரச்சாரம் கொடுத்த போதும் போலீஸார் அவர்களுக்குத் தடை விதித்தார்கள். ஏன் என்பது தெரியவில்லை. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications