ஆட்டோ ஓட்டுநருக்கு பதவி.. வேறு கட்சியில் இப்படி கொடுத்துள்ளார்களா.. தவெகவின் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!
சென்னை: 30 ஆண்டுகளாக உழைத்தவர்களுக்குதான் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். பணம், கார் பார்த்து பதவி அளிக்கப்படவில்லை என்று கூறிய அவர், சாதாரண ஆட்டோ ஓட்டுநர், கூலி தொழிலாளிக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவர் அஞ்சலையம்மாள். விடுதலைப் போராட்ட வீரரான அஞ்சலையம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல் தவெகவினர் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் அஞ்சலையம்மாள் சிலைக்கு மரியாதை செலுத்திய பின், கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். இதனிடையே பள்ளிக்கரணை அருகே நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார்.
அப்போது தவெக தலைவர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் தங்களின் கொள்கைத் தலைவர்களாக ஓரிருவரை மட்டுமே வைத்திருப்பார்கள். அவர்களின் சிலையை மட்டுமே கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்திருப்பார்கள். ஆனால் தவெகவில் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி கொள்கைத் தலைவர்கள் அனைவரின் சிலைகளும் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், மக்கள் இயக்கம், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்று எப்படி இருந்தாலும், எப்போதும் மக்களுக்கு சேவை செய்து வந்துள்ளோம். பல ஆண்டுகளாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளோம். தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான். அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை.
நாங்களும் மக்களின் தேவைகளை அறிந்து, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யக் கூடிய கட்சியாக தவெக இருக்கும் என்று சொல்லிக் கொள்கிறேன். தவெக தலைமைக்கு எப்போதும் உண்மையாக இருந்து வருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன் விஜய் சினிமாவில் உச்சத்திற்கு வருவார். 2026ல் இந்த இடத்தில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருந்து மக்கள் சேவை செய்திருக்கிறார்கள். அப்படி உழைத்தவர்கள்தான் எங்களுடன் நிர்வாகிகளாகவும், தோழர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குதான் விஜய் மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்துள்ளார். அதனை விடுத்து அவர்களிடம் பணம் உள்ளதா, கார் உள்ளதா என்பதை பார்த்து பதவி கொடுக்கவில்லை.
யார் போஸ்டர் ஒட்டினார்களோ, யார் மக்களுக்கு சேவை செய்தார்களோ அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. சாதாரண கூலி தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்படி வேறு எந்த கட்சியிலும் பதவி கொடுக்கப்படவில்லை. தவெகவில் மட்டுமே உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications