நீங்களுமா? புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் விஜய் ரசிகர்கள்.. அரசியலுக்கே வரல.. அதற்குள் இப்படியா?
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காலில் விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து விழுந்து மரியாதை செலுத்தும் காட்சி வெளியாகி உள்ளது.
அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் வாயிலாக அரசியலுக்கு காய் நகர்த்தி வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார் விஜய்.

தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் விஜய், வேகமாக அரசியல் நோக்கி நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை நடிகர் விஜய்கேட்டுக்கொண்டு இருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அம்பேத்கரை வைத்து விஜய் அரசியலை தொடங்கி இருப்பதாக விவாதங்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
அதேபோல் ரமலான் மாதம் இஃப்தார் விருந்து வழங்கி இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வகையில் ஒரு வேளை (மதியம்) உணவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கடந்த சனிக்கிழமை விஜய் நேரில் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினிக்கு அவர் வைர நெக்லஸை பரிசாக அளித்தார்.
12 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்றுகொண்டு விஜய் மாணவர்கள், பெற்றோர்களிடம் நடந்துகொண்ட விதம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக கல்வி மாவட்டம், மாவட்டம், வட்டாரம், மாநில அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தொகுதி அளவில் விஜய் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்குவது அரசியலுக்கான நகர்வு என்றே கூறப்பட்டது.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களிடம் அறிவுறுத்திய விஜய் ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றியும் பேசினார். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விலையில்லா விருந்தகத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். இதற்காக அவர் காரில் இருந்து இறங்கி வந்தபோது அவரது காலில் விழுந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆசி பெற்றனர்.












Click it and Unblock the Notifications