அம்பேத்கர் பிறந்தநாள், காமராஜர் பிறந்தநாளில் 234 தொகுதிகளை "குறி வைத்த" விஜய்.. நாள் குறிச்சாச்சாமே!
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்குவதற்கான நாள் குறித்தாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவருடைய ரசிகர்களும் செய்திகளும் வெளியாகி வருகின்றன. ஆனால் இது வரை விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து அவர் இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.

ஆனால் அவருடைய செயல்பாடுகளை பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவது போல் இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றனர். இதுவே விஜய் தனது செல்வாக்கை ஆழம் பார்த்தார் என்றே கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் பனையூர் அலுவலகத்தில் அவ்வப்போது மக்கள் இயக்கத்திநருடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் விஜய் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளன்று 234 தொகுதிகளிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அது போல் உலக பட்டினி தினத்தையொட்டி 234 தொகுதிகளிலும் மதிய உணவை வழங்குமாறு இயக்கத்தினருக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார். எல்லாவற்றுக்கும் மேல் அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தார்.
அப்போது நாளைய வாக்காளர்களே என அழைத்து நீங்கள் ஓட்டு போடும் போது நல்ல பல புதிய தலைவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அப்போது பணத்தை பார்த்து ஓட்டு போடாமல் வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிகழ்வுக்கு பிறகும் அவர் பனையூரில் மக்கள் இயக்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார்.
எனவே விஜய் முழுவீச்சில் அரசியலில் இறங்க தயாராகி வருகிறார் என்றே தெரிகிறது. இந்த நிலையில் பிரபல ஜோதிடர் சீதா ரமேஷும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார், ஆனால் விஜயகாந்துடன் அவர் வந்தால் வெல்ல முடியும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்குவதற்கான நாள் குறித்தாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளின் போது அரசியல் கட்சியை தொடங்குவார் என சொல்லப்படுகிறது. பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களிடம் பேசிய போது அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படியுங்கள் என அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் அம்பேத்கர் பிறந்தநாளன்று அவருடைய சிலைகளுக்கு மாலை அணிவிக்குமாறு தனது இயக்கதினரிடம் சொல்லியிருந்தார்.
அது போல் கல்வி கண் திறந்த காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி இரவு நேர பாடசாலையை தொடங்கி வைத்தார். அந்த வகையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை விஜய் அறிவித்து கட்சியை தொடங்குகிறார் என்கிறார்கள். அவர் 2024 ஆம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா, இல்லை 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என தெரியவில்லை. மேலும் சிலர் தனது லியோ படத்திற்காகவே அவர் 234 தொகுதிகளையும் குறி வைக்கிறார், அவர் அரசியலுக்கு வரமாட்டார். அப்படியே வந்தாலும் மாற்று கட்சியினர் அவருடைய கட்சியில் இணைந்தால் அவர்களை சமாளிக்க வேண்டும். திமுக, அதிமுக, பாஜகவை எதிர்க்க வேண்டும். இதையெல்லாம் அவர் செய்ய மாட்டார் என்கிறார்கள். எனவே என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications