நேரடியாக இறங்கும் விஜய்.. ஆரம்பமே அதிரடி! "பிரம்மாண்ட பொது கூட்டம்.." அதுவும் அடுத்த மாதமே.!
சென்னை: நடிகர் விஜய் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் சில நடிகர்கள் டாப் இடத்தில் இருப்பார்கள். அதன்படி இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித்- விஜய் தான். இருவருக்கும் உலகெங்கும் பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர்.

இதில் நடிகர் அஜித் தொடக்கம் முதலே அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார். தனது ரசிகர் மன்றத்தையே கூட கலைத்துவிட்டார். படங்களில் நடிப்பதுடன் அஜித் நிறுத்திக் கொள்கிறார்.
விஜய்: இருப்பினும், விஜயின் ஒவ்வொரு செயலும் அரசியலை நோக்கியே இருக்கிறது. அவரது செயல்பாடுகள் அனைத்தும் அதை நோக்கியே இருந்து வருகிறது. தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ள விஜய், அதன் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடர்ச்சியாகவே வழங்கி வருகிறார். இது மட்டுமின்றி அவர் ரசிகர் மன்றம் மூலம் பலவற்றைச் செய்து வருகிறார்.
இவை அனைத்தும் அவரது அரசியல் வருகையைக் குறிப்பதாகவே இருக்கிறது. தலைவா படத்தில் இருந்தே இதற்கான "குறியீடுகள்" தெரியத் தொடங்கிவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்ப கடத்தில் இருந்த "Time to Lead" என்ற ஒற்றை வரியே பட ரிலீஸுக்கே பிரச்சினையாக அமைந்தது. அப்போது என்னவெல்லாம் நடந்தது என்பதும் கிட்டதட்ட அனைவருக்கும் தெரியும்.
தொடர்ச்சியாக மெரிசல், சர்கார் படங்களும் கூட ரிலீஸ் சமயத்தில் சர்ச்சையானது. படத்தில் இருக்கும் சில இடங்களில் இருக்கும் அரசியல் வசனங்களையும் ரசிகர்கள் கவனிக்கத் தவறியதில்லை. இவை எல்லாம் டிரைலர் தான்.. உண்மையில் ஒவ்வொரு ஆடியோ வெளியீட்டு விழாவின் போதும் அவரது பேச்சு தான் ஹைலைட். அதில் அரசியல், தத்துவம். என எல்லாமே கலந்திருக்கும். அடுத்த சில நாட்களுக்கு அவரது பேச்சு தான் டிரெண்டிங்கில் இருக்கும். அந்தளவுக்கு அதிரடியாகப் பேசுவார்.
தேர்தல்: அப்படி மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டவர் தான் விஜய். விஜயகாந்த் அரசியலில் நுழையும் முன்பு எப்படி தனது ரசிகர்களை உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வைத்தாரோ.. அதே பாதையில் தான் விஜயும் பயணிக்கிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனது படத்தையும் ரசிகர் மன்ற கொடியையும் பிரசாரத்திற்குப் பயன்படுத்த விஜய் அனுமதித்திருந்தது இதில் கவனிக்கத்தக்கது.
இதுவே அரசியல் என்டரிக்கான தெளிவான ஆதாரம் என்கிறார்கள். அத்துடன் நில்லாமல் தேர்தலில் வென்றவர்களுடன் போட்டோவும் எடுத்து கெத்து காட்டினார் விஜய். இதற்கிடையே சமீபத்தில் அவர் தனது ரசிகர்களை அம்பேத்கர் சிலைக்கும் தீரன் சின்னமலை சிலைக்கும் மரியாதை செலுத்தவும் தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு உத்தரவிட்டார். இவை ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.
ஆலோசனை: இதற்கிடையே விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி அவ்வப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். அதன்படி இன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தர்மபுரி, அரியலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாகப்பட்டினம், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் சில முக்கிய விஷயங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில், +2 பொதுத் தேர்வில் அரசுப் பள்ளியில் படித்து முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை தர மடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல்களைத் திரட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த மாதம் விஜய் மக்கள் இயக்க பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் நடிகர் விஜய் நேரடியாகக் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. விஜய் தலைமையில் நடக்கும் இந்த பொதுக் கூட்டத்தில் +2 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications