5 நாட்கள் கூட தாங்காத விஜய் 'கோட்' படம்.. 'அரசியல் பாதை' என்னவாகுமோ? பீதியில் 'நண்பாஸ்' கோஷ்டி!
சென்னை: 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உடனேயே தமிழ்நாட்டு மக்களை விடுதலை செய்யப் போகிற அவதாரமாக தம்மை பிரகடனம் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாட்டை வரும் 23-ந் தேதி விக்கிரவாண்டியில் நடத்தும் நடிகர் விஜய்க்கு அவரது கடைசி படத்துக்கு முந்தைய படமான 'கோட்' வசூல் நிலவரம்தான் 'கிலி'யை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
தமிழ்நாட்டில் திரைத்துறையில் இருந்துவிட்டாலே போதும்.. அரசியலில் கால் பதித்து ஆட்சியையும் கைப்பற்றி முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்பது காலம் காலமாக இருந்து வரும் கனவு. எம்ஜிஆர் என்கிற புலியைப் பார்த்து இப்படி சூடு போட்டுக் கொண்ட பூனைகள் ஏராளம்.

கோட் திரைப்படம்: இந்த வரிசையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்ற கனவில் இருக்கிறார் நடிகர் விஜய். திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நிலையில் 'அதிகார போதை' அவரை அரசியல் களத்துக்கு இழுத்துவிட்டிருக்கிறது. தற்போது விஜய் நடித்து வெளியான கோட் திரைப்படம்தான் அவரது கடைசி படத்துக்கு முந்தைய படம். கோட் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை உள்ளிட்டவற்றை கணக்கில் வைத்துதான் கோட் படத்தை வியாழக்கிழமை ரிலீஸ் செய்தனர். இந்த கணக்கும் ஒர்க் அவுட் ஆகவே செய்தது. ஆனால் எத்தனை நாளைக்கு ஒர்க் அவுட் ஆனது? என்பதுதான் கேள்வி.
4 நாட்கள் அமோக வசூல்: கோட் திரைப்படம் மொத்தமே 4 நாட்கள்தான் திரையரங்குகளில் தாக்குப் பிடித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை உலகம் முழுவதும் மொத்தம் ரூ288 கோடியை வசூல் செய்தது கோட் படம். இந்தியாவில் மட்டும் ரூ137 கோடியை கோட் படம் வசூல் செய்து கொடுத்தது. இதனால் கோட் படம் அமோக வசூல்! அமோக வெற்றி! என கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பட்டாளத்துக்கு திங்கள்கிழமை கிடைத்ததுதான் செம்ம ஆப்பு!
படுத்துவிட்ட கோட் வசூல்: விஜய் நடித்த கோட் படத்தின் திங்கள்கிழமை வசூல் வெறும் ரூ14 கோடிதான். முந்தைய 4 நாட்கள் வசூலில் பாதியளவுதான் திங்கள்கிழமை வசூலானது. அதாவது திங்கள்கிழமையன்று கோட் படம் ஓடிய திரையரங்குகளில் 58.5% இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. கோட் திரைப்படம் குறித்து வெவ்வேறு வகையான விமர்சனங்கள் பலரையும் திரையரங்குகள் பக்கம் எட்டிப்பார்க்கவிடவில்லை.
'வெறித்தனமான' விமர்சனங்கள்: கோட் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் 'தில்லானா மோகனாம்பாள்' படத்தை இன்னொரு வெர்சனாக 'கரகாட்டக்காரன்' என எடுத்தார். தந்தையைப் போல மகன் வெங்கட் பிரபுவும் விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் விஜய்காந்த் நடித்த ராஜதுரை படத்தின் அப்டேட் வெர்சனாக 'கோட்' படத்தை இயக்கி இருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள், பேசாமல் யூ டியூப்பில் ராஜதுரை படத்தையே பார்த்துவிடலாம் என பலரையும் தடுத்துவிட்டது என்பதையே திங்கள்கிழமை வசூல் நிலவரம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
அரசியல் என்னவாகுமோ?: இது ஒருபுறம் இருக்க, அரசியலுக்கு வந்துவிட்ட நடிகர் விஜய், விடிந்து எழுந்தால் மாநாடு என்கிற வகையில் வரும் 23-ந் தேதி விக்கிரவாண்டியில் மாஸ் காட்ட இருக்கிறார். ஆனால் நடிகர் விஜய்க்கு இருப்பதாக நம்பப்படும் ஆகக் குறைந்தபட்ச ரசிகர் பட்டாளத்தின் ஆதரவு இவ்வளவுதானா? என்பதை 5 நாட்கள் கூட தாங்காத கோட் படத்தின் வசூல் சொல்லாமல் சொல்லுகிறதே.. அதுவும் அரசியலில் கால் பதித்து மாநாடு நடத்துகிற நிலையில் கூட 5-வது நாள் வசூல் படுத்தேவிட்டது என்றால் '4 நாட்கள் கொண்டாடத்தான் விஜய்' சரிப்பட்டு வருவார்.. அதற்கு மேல் அவருக்கு "மக்கள் எனும் சட்டியில் ஆதரவு என்பது எதுவும் இல்லை.. அதனால் அகப்பையிலும் எதுவும் வராது" என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும். இதனால்தான் விஜய் கட்சியின் "நண்பாஸ்" கோஷ்டிகள் இப்படி படுத்திருச்சே படம் என்கிற புலம்பலை வெளிப்படுத்துகின்றன. அய்யோ பாவம்!












Click it and Unblock the Notifications