கேப்டனுக்கு அப்பறம் ’தளபதி’ தான்.. யாருமே செய்ய முடியாததை செய்த விஜய்.. வாழ்த்து சொன்ன நடிகர் விஷால்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் நடக்க இருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால். மேலும் கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் ( 27ஆம் தேதி) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர்.
மாநாட்டு ஏற்பாடுகள் இறுதித் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ள விஜயின் கட் அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநாட்டு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநாட்டில் நுழைவாயில் பகுதியில் இரண்டு யானைகள் கால்களை உயர்த்தி சொல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதோடு அதற்கு நடுவில் வெற்றி கொள்கை திருவிழா என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.
மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர் ஆகியோர்களின் கட்ட அவுட்களோடு, விஜய்யின் கட் அவுட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலேயே முதன்முறையாக இதுபோன்ற கட் அவுட்கள் விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் மட்டும் தான் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் நடிகர் விஷால். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இதற்காக விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் விஜயகாந்துக்குப் பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அது விஜய் தான்.
விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்ன என்ன திட்டங்களை தனது மனதில் வைத்திருக்கிறார்? என தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தில் இருக்கும் ஒருவர் அதனை விட்டு விட்டு அரசியலுக்கு செல்வது சாதாரண விஷயம் இல்லை. இது மிக ஒரு முடிவு என்று தான் சொல்ல வேண்டும்.
கோடிக்கணக்கில் சினிமாவில் பணம் சம்பாதிக்கும் ஒருவர் அதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வருகிறேன் என்பது மிகவும் வரவேற்க கூடிய ஒரு விஷயம். விஜய்க்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு செல்வது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. மாநாட்டில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை பார்க்க அவரது ரசிகர்கள், தொண்டர்கள், தமிழக மக்களை போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications