அரசியல் கட்சி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஷால்! பொடி வைத்தும் அறிக்கை வெளியீடு
சென்னை: அரசியல் கட்சியை தொடங்குவதாக வதந்தி பரவிய நிலையில் நடிகர் விஷால் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் என்.டி.ராமாராவ், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் என சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து சாதிக்கவும் செய்தனர். இவர்களை போல் கமல்ஹாசனும் அரசியலில் சாதிக்க வேண்டும் என எண்ணினார்.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தாலும் அவருடைய கட்சி கணிசமான வாக்குகளை பெற்றது.
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அவருக்கும் அதே தொகுதியில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசனுக்கும் போட்டியானது கடுமையாக இருந்தது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையும் பரபரப்பாக இருந்தது. ஆயினும் வானதி வென்றார். ஆனால் வெறும் 1000 வாக்குகளில்தான் கமல் தோல்வியுற்றார்.
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லி அவர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளார். அவர் ஏற்கெனவே அரசியல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்புமனுவில் தவறு இருப்பதாக கூறி அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கான பெயரை இன்று காலை 10 மணிக்கு விஷால் அறிவிக்கிறார் என தகவல்கள் கிடைத்தன. அது போல் விஷாலும் விஜய்யை போல் நாடாளுமன்றத் தேர்தலில் பார்வையாளராக இருப்பார் என்றும் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிடுவார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஷால் ஒரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் விஷால் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என எண்ணினேன். இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன் என் தாயார் பெயரில் இயங்கும் தேவி அறக்கட்டளை மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம்.
பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம். அது மட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை. நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன். தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போதும் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன். இவ்வாறு நடிகர் விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications