படத்துலயே நடிக்க முடியாது பார்த்துக்கோங்க.. நீதிபதி வார்னிங்.. சொத்து கணக்கை தாக்கல் செய்தார் விஷால்
சென்னை: நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து நடிகர் விஷால் தனது சொத்து விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இது வரைக்குமான வங்கி கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்து.
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால், நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராகி அவர் தரப்பில் நீதிபதி.பி.டி.ஆஷா முன்பு மன்னிப்பு கோரப்பட்டது. அப்போது, விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெற்று, இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில், ஐ.டி.பி.ஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எப்.சி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிகளில் ஆறு கணக்குகளின் விவரங்களும், சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அசையா சொத்து விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், முழுமையான தகவல்களை தாக்கல் செய்யவில்லை என்பதால் பதில் மனு தாக்கல் செய்ய லைகா தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று வழக்கு விசாரணையை நீதிபதி ஆஷா வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications