தம்பிகளா பட்டா கத்தியை கீழே போடுங்க.. வாங்க மரம் செடி நடலாம்.. விவேக்கின் அன்பு அழைப்பு
மாணவர்களுக்கு நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: மாணவர்கள் கையில் பட்டாக்கத்தியை பார்த்ததில் இருந்தே 2 நாட்களாக விவேக் தன்னுடைய கவலையை தெரிவித்து வருகிறார். இப்படி கத்தி, அரிவாள் ஏந்தும் மாணவர்கள் மரம் வளர்க்க முயல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினர் ரூட் தல விவகாரத்தை கிளப்பினர். அதனால் அரிவாள், கத்தியை கொண்டு ஒருத்தரை ஒருத்தர் தாக்கி கொண்டனர்.
இந்த வீடியோ பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் தந்தது. ஆனால் சென்னை நகர போலீசாரை இந்த விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். சம்பந்தப்பட்ட மாணவர்களை கைது செய்து, கல்லூரி மாணவர்களிடம் கவுன்சிலிங் செய்தனர். மேலும் ரூட் தல உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையும் விடுத்தனர்.
|
இதயம்
இந்த சம்பவத்துக்கு நடிகர் விவேக் அன்றே தனது கவலையை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். "மாணவர்கள் கையில் பட்டாகத்தி. கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும். இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மை ஆக்கும்; கல்வி பயின்றால் அது வாழ்வை மேன்மை ஆக்கும். ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்" என்று பதிவிட்டிருந்தார்.

மாணவர்கள்
இருந்தாலும் அவருக்கு மனசே ஆறவில்லை போலும்.. வேலூரில் ஊரிஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பசுமை இயக்க மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் அதன் அவசியம் பற்றிய நிகழ்ச்சி நடந்தது.

பட்டப்படிப்பு
இதில் விவேக் கலந்து கொண்டு பேசும்போது, "மரத்தை வச்சவன்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது பழமொழி. ஆனால் இன்னைக்கு, யாரு மரத்தை வச்சாலும் நாமதான் தண்ணீர் ஊற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். படிக்கிற மாணவர்கள் ஒரு பட்டம் பெற வேண்டும் என்றால், இத்தனை மரம் நட்டிருந்தால்தான் பட்டம் பெற முடியும் என்ற ஒரு திட்டம் கொண்டு வரணும். அப்போதான் பல லட்சம் மரக்கன்றுகள் நடலாம். இதை அரசுதான் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நீர்நிலைகள்
கத்தி, அரிவாள் ஏந்தும் மாணவர்கள் மரம் வளர்க்கவும், நீர்நிலைகளை பாதுகாக்கவும் முயல வேண்டும்; இம்முயற்சியில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டால் புரட்சி ஏற்பட்டு தமிழகம் பசுமையாக மாறும்" என்றார்.












Click it and Unblock the Notifications