திராவிட கட்சிகளிடம் சாய்ந்த திரையுலகம்.. இனி பாஜக பக்கம் பாயும்.. ஒய்.ஜி.மகேந்திரன் பரபர பேச்சு
திரையுலகம் இனி பாஜக பக்கம் சாயும் என்று ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழ் திரையுலகில் பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என்று மூத்த நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் தெரிவித்துள்ளது சலசலப்பை உண்டு பண்ணி உள்ளது.
நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர்.
டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு ஒன்றினையும் அளித்துவிட்டு வந்தனர்.
ஒய்.ஜி மகேந்திரன்
இந்த நிலையில்தான் கன்னியாகுமரியில் நடந்த பாஜக கூட்டத்தில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவர்களிடம் பேசும்போது, "தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்ததுபோல், தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என எதிர்பார்க்கிறேன்.
மாறும்
மாறும்.. ஏன் மாறாது.. முன்பு நான் இருந்தேன்.. பிறகு கவுண்டமணி வந்தார்.. அதன் பிறகு வடிவேலு வந்தார். மாறலையா.. அது போல இதுவும் மாறும். நாடு முன்னேற வேண்டுமென்றால் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு பின்னால் மக்கள் செல்ல வேண்டும்" என்றும் தெரிவித்திருந்தார்.
கருத்து
ஒய்.ஜி-யின் இந்த கருத்து பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகம் என்பது பொதுவானது... இதில் அனைத்து கட்சியினருமே கலந்துள்ளனர்.. இதை மறந்துதான் இத்தனை காலம் படங்களில் நடித்து கொண்டுள்ளனர். ஆனால் ஒய்ஜி இவ்வளவு பகிரங்கமாக கருத்து சொல்லியது ஏன் என்றுதான் பலரும் குழம்பி உள்ளனர்.
கருணாநிதி, ஜெயலலிதா
தமிழ் திரையுலகில் வருடா வருடம் எந்த ஒரு விழா நடந்தாலும் அதற்கு மாறி மாறி கருணாநிதி, ஜெயலலிதா இரு தலைவர்களுமே முக்கியத்துவம் அளித்து வந்து விழாவில் பங்கேற்பார்கள். சிவாஜி கணேசன் (காங்கிரஸ்காரர்) இருந்தவரை அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காரணம், அடிப்படையில் இவர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள்.. கலைஞர்கள் மீது தனிப்பட்ட பாசமும், அக்கறையும் வைத்திருப்பவர்கள்.. அதனால் அவரவர் ஆட்சியில் இருக்கும்போது, அவர்கள் தலைமையில் விழா நடந்து வந்தது. ஆனால், இப்போது முதல்முறையாக பாஜக பெயர் அடிபட ஆரம்பித்துள்ளது. ஒய்ஜி மகேந்திரன் தனது விருப்பத்தை ஆசையை இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.
சாதி
நேற்று ஆர்கே செல்வமணி ஒரு பேட்டி தந்திருந்தார் அதில், "அமைச்சர் நிர்மலா சீதாராமனை திரைத்துறையை சேர்ந்த 2 பேர் பொதுவெளியில்அவரது சாதியை குறிப்பிட்டு பேசுவதாக தங்களிடம் வேதனையை பதிவு செய்தார். ஒருவர் மீதான தனிமனித தாக்குதலை திரை கலைஞர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். அப்படி நிறுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் வளர்ந்து விட்டீர்கள். அதனால் பேசிவிட்டு போய்விடுவீர்கள், கடைசியில் கஷ்டப்பட போவது நாங்கள்தான்" என்றார் ஆவேசமாக.
பாஜக முத்திரை
2 பேர் என்று சொன்னாரே தவிர, யார் அவர்கள் என்பதை செல்வமணி வெளிப்படையாக சொல்லவில்லை. எப்படி பார்த்தாலும், திரையுலகிலும் முத்திரையை பாஜக பதிக்க ஆரம்பித்துள்ளதை உணர முடிகிறது.. அதற்கான அறிகுறிகளும் தென்பட தொடங்கி விட்டன.