ஆந்திர ராஜூ சாதி.. ராஜபாளையத்தில் ‘கண்’ வைக்கும் கவுதமி! குறுக்கே வரும் கேடிஆர்.. அதகளமான அதிமுக!
சென்னை: பிரபல நடிகையான கவுதமி பாஜகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருக்கும் நிலையில் ஆந்திரா ராஜூ சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட அவர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கௌதமியை களத்தில் இறங்க அனுமதிக்க கூடாது என்றும் திரை மறைவில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் என்கின்றனர் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர்.
1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என அப்போதைய முன்னணி நாயகர்களுடன் நாயகியாக நடித்து புகழ்பெற்றவர். நடிகர் கமலுடன் வாழ்ந்து வந்த அவர் திடீரென அவரை பிரிவதாக அறிவித்தார். தொடர்ந்து பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
நீண்ட காலம் பாஜகவில் பயணித்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அவர் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிந்தவுடன் சில காரணங்களால் பாஜகவில் இருந்து விலகிய அவர் அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வகிக்கும் அவர் தமிழகம் முழுவதும் நடைபெறும் அதிமுக கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அந்த பகுதி முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கௌதமியை அழைத்துச் சென்று கூட்டங்களில் பேச வைக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தேர்தல் அரசியலில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார் கவுதமி. குறிப்பாக ராஜபாளையம் தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவர் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. காரணம் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ராஜு சமுதாயத்தினர் ராஜபாளையம் தொகுதியில் அதிகம் வசிக்கிறார்கள் என்பது தான்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த போது தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ராஜபாளையத்தில் பொறுப்பாளராக இருந்தாலும் வேட்பாளர் போலவே வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார் கவுதமி. தேர்தலிலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பி இருந்தார். ஆனால் அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளரும், அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பியதால் கௌதமியால் தேர்தலில் நிற்க முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கட்சியிலிருந்து வெளியேறினார். விலகல் கடிதத்தில் கூட தனக்கு ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், 5 மாதம் பணியாற்றியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்திருக்கும் கவுதமி மீண்டும் ராஜபாளையம் பக்கம் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். அதிமுக தலைமை இடமும் இது தொடர்பாக பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் தொகுதிக்கு மாறலாம் அல்லது சிவகாசி தொகுதிக்கு மாறலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இந்து முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடலாம் என நினைக்கிறார் கவுதமி. ஆனாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவார் ராஜேந்திர பாலாஜி என்கின்றனர் விருதுநகர் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள். காரணம் விருதுநகர் மாவட்ட அரசியலில் அதிமுக என்றால் ராஜேந்திர பாலாஜி தான். தன்னைவிட பிரபலமான தெரிந்த முகமாக நடிகை அரசியலுக்கு வந்தால் தன்னை ஓரம் கட்டி விடுவார்கள் என்று அச்சம் ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கிறது.
அதனால் தான் இங்கு அதாவது ராஜபாளையத்தில் அதிமுகவை போட்டியிட வைக்காமல் பாஜக அல்லது வேறு கூட்டணி கட்சியை களம் இறக்க திட்டமிட்டு வருகிறாராம். குறிப்பாக தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோபாலசாமி ராஜபாளையத்தில் போட்டியிட தீவிரம் காட்டி வரும் நிலையில், அவரை போட்டியிட வைத்து கௌதமியை ஓரம் கட்டிவிடலாம் என ராஜேந்திர பாலாஜி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியில் மறைமுகமாக மோதல் எழுந்துள்ளது என்கின்றனர் விருதுநகர் மாவட்ட அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications