பாஜகவில் சேர்ந்துமே மோடியை விமர்சித்த ட்வீட்டை டெலிட் செய்யவில்லை.. "சேரி" பதிவும் நீங்காது- குஷ்பு
சென்னை: நான் பிரதமர் மோடி குறித்து விமர்சித்த ட்வீட்டுகளையே இதுவரை நீக்கவில்லை. சேரி மொழி ட்வீட்டை நான் நீக்க மாட்டேன் என நடிகையும் தேசிய மகளிர் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் நான் சேரி மொழி என கூறியது பிரெஞ்ச் மொழி அர்த்தத்தில்தான். நான் யாரையும் தவறாக கூறவில்லை. வேளச்சேரி என இருப்பதற்கு என்ன அர்த்தம்.

சேரி என்றால் என்ன என விளக்குங்கள். வேளச்சேரி, செம்மஞ்சேரி என அரசு பதிவேடுகளிலேயே இருக்கிறதே! மணிப்பூர் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என யார் சொன்னது.
அந்த வீடியோ மே மாதம் வந்த போது மீடியா எப்படி பொங்கியதோ அதே போல் நானும் பொங்கினேன். தேசிய மகளிர் ஆணையம் என்பது காவல் துறை அல்ல, யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள். தாமாக முன் வந்து எடுக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் இதுவரை தேசிய மகளிர் ஆணையம் குறித்து பேசியதே இல்லை. ஆனால் நான் உறுப்பினராக சேர்ந்த பிறகுதான் இப்படி பேசுகிறீர்கள். நடிகை த்ரிஷா விவகாரத்தில் அவர் சார்பாக எங்களுக்கு புகார் வந்தது, அதனால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். த்ரிஷாதான் புகார் கொடுக்க வேண்டும் என்றில்லை.
யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்போம். சேரி மொழி ட்வீட்டை நான் எதற்காக டெலிட் செய்ய வேண்டும். இத்தனை நாளாக எந்த ட்வீட்டையாவது நான் டெலிட் செய்திருக்கேனா? நான் காங்கிரஸில் இருந்த போது பிரதமர் மோடியை விமர்சித்து எத்தனை ட்வீட்டுகளை போட்டிருந்தேன். அதையெல்லாம் பாஜகவுக்கு வந்த போது கூட நான் டெலிட் செய்யவில்லை.
அப்படியிருக்கும் போது நான் தவறாக பேசாத ஒரு ட்வீட்டை நான் ஏன் டெலிட் செய்ய வேண்டும். ஒரு முறை பதிவு செய்தால் பதிவு செய்ததுதான். இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications