நடிகை பிரியா பவானி சங்கர் உருக்கம்.. "மாணவிக்கு நீதி வேண்டும்".. கோடம்பாக்கத்தில் ஒலித்த ஒரே குரல்
நடிகை பிரியா பவானி சங்கர், கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி வேண்டும் என்று கேட்டுள்ளார்
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகை பிரியா பவானி சங்கர் பதிவு செய்துள்ளார். பெரும்பாலான திரையுலகமே சைலண்ட்டாக இருக்க, முதல் குரல் ஒலித்த நிலையில், அதற்கு கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
பணம் சம்பாதிக்கவும், புகழ்பெறவும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைக்காகவும் எத்தனையோ பேர் ஹீரோயின்களாக உருவாகி உள்ளனர்.
சினிமாவில் நடித்தாலும், சமூக பிரச்சனைகளில் பலர் தலையிடுவது இல்லை.. எதையாவது சொல்ல போய், வம்பில் போய் முடிந்துவிடுமோ என்று பயந்து கொண்டு, அரசியல் விவகாரத்திலும் சரி, மத விவகாரங்களிலும் சரி, பெரும்பாலானோர் வாயே திறப்பது இல்லை.
கள்ளக்குறிச்சி கலவரம்.. அன்றே சொன்னார் ரஜினி.. சமூகவலைதளங்களில் டிரெண்ட்டாக்கும் ரசிகர்கள்
நடிகைகள்
அப்படி இருந்தும் சில நடிகைகள், எதை பற்றியும் கவலைப்படாமல், துணிந்து பொதுவெளியில் கருத்துக்களை கூறுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது... அப்படி பேசி, பலரது ஆதரவையும் சமீபத்தில் பெற்றவர் நடிகை சாய் பல்லவி.. பாஜகவை விமர்சித்து, இஸ்லாமியர்களுக்கான ஆதரவுக் கரத்தை நீட்டியதால், பரபரப்பாகவும் இவர் பேசப்பட்டார்.. இது தொடர்பாக போலீசில் புகார் தரப்படவும், அந்த வழக்கை சாய் பல்லவி சந்தித்து வருகிறார்.
கோர்ட்டில் விசாரணை
ஆனால், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தமிழகத்தை தற்போது உலுக்கி எடுத்து வருகிறது.. மாணவி எப்படி இறந்துபோனார் என்பதே இதுவரை தெரியாமல் உள்ளது.. போலீசார் ஒருபக்கம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது.. எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன.. ஆளும் தரப்பை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.. இதற்கு நடுவில், அந்த தனியார் பள்ளிக்கு எதிராக வன்முறைகள் கொப்பளித்தன.
சூர்யா கோரிக்கை
இதனிடையே, உயிரிழந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் வெடித்து வருகின்றன.. ரஜினிகாந்த், குஷ்பு, சூர்யா, கஸ்தூரி, போன்றோர் சினிமா துறையை சார்ந்தவர்கள் என்றாலும், வழக்கமாக தமிழகத்தை பாதிக்கக்கூடிய அரசியல் உட்பட அனைத்து விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர்கள்.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கும் தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்துள்ளனர். ஆனால், வேறு யாரும் அந்த அளவுக்கு எதிர்ப்பு காட்டவில்லை.. இதை பற்றி கருத்தும் சொல்லவில்லை என்றே தெரிகிறது.
நடிகை பிரியா பவானி
இந்நிலையில்தான், நடிகை பிரியா பவானி சங்கர், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்... இந்த பதிவை பார்த்ததுமே, மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நடிகை என்று ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.. ஆரம்பத்தில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர்.. அதன்பிறகு, விஜய் டிவி தொடரில் நடித்து பிரபலமானார்.. இதற்கு பிறகு, ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்தவர்..
நியூஸ் ரீடர்
எனினும், ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்ததால், சமூக அக்கறை இயல்பாகவே, பிரியாவுக்கு இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்... அதேபோல, சாத்தான்குளம் பிரச்சனைக்கு சினிமா துறையில் காட்டப்பட்ட அக்கறை, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இல்லை என்றே சொல்கிறார்கள்.. கருத்து சொல்வது என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், தமிழகமே இந்த 4 நாட்களாக கொந்தளிப்பில் உள்ளபோது, சினிமா வட்டாரத்தில் பிரபலங்கள் ஏன் அமைதி காத்து வருகின்றனர் என்பதும் பலரது கேள்வியாக உள்ளது.