நடிகை விஜயலட்சுமி பலாத்காரம்- 6 முறை கருக்கலைப்பு- 12 வார விசாரணை முடிவில் சீமான் கைது?
சென்னை: நடிகை விஜயலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டது, 6 முறை கருக்கலைப்புக்குள்ளாக்கப்பட்டது விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான குற்றச்சாட்டுகளை 12 வார விசாரணையில் உறுதி செய்தால் உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என்கின்றன அரசு வட்டாரங்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் 2-வது மனைவி மகள் கயல்விழியை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு மகன் ஒருவர் உள்ளார்.

இந்த நிலையில் 2008-ம் ஆண்டு முதலே சீமானுடன் சில ஆண்டுகள் மனைவியாக தாம் குடும்பம் நடத்தினேன்; தம்மை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார் சீமான்; திருமண ஆசையை காட்டியே கருக்கலைப்பு செய்ய வைத்தார் சீமான் என்பது நடிகை விஜயலட்சுமியின் குற்றச்சாட்டு. இது தொடர்பாக போலீசில் 2 முறை விஜயலட்சுமி புகார் கொடுத்து பின்னர் சீமான் தரப்பு நடத்திய பேச்சுவார்த்தைகளில் அவற்றை வாபஸ் பெற்றார்.
அதேநேரத்தில் சீமான் தம் மீது விஜயலட்சுமி கொடுத்த புகார்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டதால் போலீசார் பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குதான் தற்போது சீமானுக்கு பெரும் நெருக்கடியாகிவிட்டது.
சீமானின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியினரால் மிரட்டப்பட்டுள்ளார்; அதனால் புகாரை வாபஸ் பெற்றார்; இது பலாத்கார வழக்கு என்பதால் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது; பலாத்கார வழக்கு என்பதால் அரசு தரப்பே விசாரணை நடத்தலாம்; திருமணம் செய்வதாக கூறி விஜயலட்சுமியை 6 முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார் சீமான். ஆகையால் இது தொடர்பாக 12 வாரத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டார்.
இதனால் நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு தரப்பு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானுக்கு எதிராக மொத்தம் 15 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவில் சீமான் குற்றவாளிதான் என போலீசார் முடிவு செய்துவிட்டால் அவர் கைது செய்யப்படுவது உறுதி. தற்போதைய நிலையில் விசாரணை நடத்தும் அதிகாரிகள்தான் சீமான் கைது குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடியவர்கள். இந்த கைது நடவடிக்கை 12 வார விசாரணைக்கு நடுவேயும் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை என்கின்றன. இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடிய நெருக்கடியில்தான் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications