Exclusive: இனி என்னை ஆக்டிவாக பார்க்கலாம்... அதிமுக துணை கொ.ப.செ.விந்தியா அதிரடி!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குறை சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியாது என விமர்சித்துள்ளார் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் விந்தியா.
அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளர் என்ற பொறுப்பிலிருந்து கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற புரோமோஷன் கிடைத்ததை அடுத்து விந்தியாவிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம்.
அப்போது அவர் கூறிய விவரம் பின்வருமாறு;
கேள்வி: ஆக்டிவ் அரசியலில் இருந்து நீங்கள் சில காலம் ஒதுங்கியதற்கான காரணம் என்ன?
பதில்: அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருக்கும் நான், 2006 சட்டமன்றத் தேர்தல் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் வரை அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்திருக்கிறேன். கட்சிப் பணிகள் மற்றும் பிரச்சாரங்களில் எப்போதும் பரபரப்பாக இயங்கக்கூடியவள் நான். அதனால் ஆக்டிவ் அரசியலில் இருந்து நான் ஒதுங்கியதாக கருத தேவையில்லை. மேலும், அதிமுகவில் கொள்கை பரபரப்பு துணைச் செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பு தற்போது கிடைத்துள்ளது. இதனால் இனி எப்போதும் என்னை ஆக்டிவ் அரசியலில் பார்க்கலாம்.
கேள்வி: அதிமுகவில் உங்களுக்கு கிடைத்த இந்த பதவியை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அரசியல், அதிகாரம், பணம் என எந்த பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்தேன். அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம், கட்சித் தலைமை மீது நான் கொண்டுள்ள விசுவாசமும், எனது திறமையும் தான். என் மீது நம்பிக்கை வைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பை பயன்படுத்தி அதிமுகவை பலப்படுத்துவேன்.
கேள்வி: பழைய அதிமுகவுக்கும், புதிய அதிமுகவுக்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறதே?
பதில்: அதிமுகவில் வித்தியாசங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி எப்போதுமே அம்மா வழியை தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.
கேள்வி: எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு, பெரியார் சிலைக்கு காவிச்சாயம் போன்ற விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?
பதில்: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரோ, தந்தை பெரியாரோ தனி மனிதர்கள் அல்ல. இவர்கள் மக்களின் மனதை வென்ற மகத்தான தலைவர்கள். அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள். அப்படியிருக்கும் போது ஒரு சார்பினராக சித்தரிக்க முயல்வது தவறு, கண்டிக்கதக்கது. இதேபோல் மக்களின் இறை நம்பிக்கையோடு விளையாடி அதன் மூலம் ஆதாயம் தேட முயல்வதும் தவறு, கண்டிக்கத்தக்கது.
கேள்வி: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பம் இல்லையா..?
பதில்: ஒரு நடிகையாக இருந்த எனக்கு முதல்முறையாக அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. பிறகு நட்சத்திரப் பேச்சாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. அந்த வகையில் எதை எப்போது செய்ய வேண்டும் என கட்சித் தலைமைக்கு தெரியும்.
கேள்வி: சசிகலா விடுதலைக்கு பின் அரசியல் மாற்றங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறதே, உண்மையா?
பதில்: யூகங்களுக்கு பதில் சொல்வது என்பது பிறக்காத பிள்ளைக்கு பேர் வைப்பது போல் ஆகும். நடக்கும் போது பார்க்கலாம்.
கேள்வி: கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக திமுக குற்றஞ்சாட்டுகிறதே?
பதில்: கச்சத்தீவு, சேதுசமுத்திர திட்டம், காவிரி, ஈழம், மின்சாரம், ஆட்சி, என அனைத்திலும் தோல்வியை மட்டுமே சந்தித்த திமுகவுக்கு குறை சொல்வதை தவிர வேறு என்ன தெரியும். தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை கட்சிகள் இருக்கிறது என்ற விவரம் கூட தெரியாமல் கூட்டணி கட்சிக்காரர்களை வைத்து கூட்டம் நடத்திவிட்டு அனைத்து கட்சி கூட்டம் என்று அடிச்சுவிடுறார் ஸ்டாலின்.
கொரோனாவை பொறுத்தவரை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குணம் அடைபவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆகச்சிறந்த அனைத்து பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. சமூக இடைவெளி பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது என மக்களும் அரசுக்கு ஒத்துழைத்தால் கொரோனாவை இன்னும் வேகமாக விரட்டி அடித்துவிடலாம்.