தலைவரா இல்ல.. மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க.. ‘ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா?’ - கொந்தளித்த விந்தியா!
சென்னை : கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவராக இல்லை, மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க என அதிமுகவைச் சேர்ந்த நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வந்த தீர்ப்பைத் தொடர்ந்து பலர் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகின்றனர். மேலும் பலருடனும் ஓபிஎஸ் தரப்பினர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை விந்தியா, தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான்.. இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டுக்கு குறி.. தாமரை + இலை கணக்கு சாதகம்.. 'கிரவுண்ட் வொர்க்’.. ஆட்டத்தை தொடங்கிய பாஜக!
அதிமுக விவகாரம்
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ் அழைப்பை ஈபிஎஸ் ஏற்காத நிலையில், அதிமுகவை கைப்பற்றுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓபிஎஸ் டீம் டாக்
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை தன் பக்கம் கொண்டு வர ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார். ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வந்த மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பிக்கள் பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவி வருகின்றனர். உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் சமீபத்தில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். தொடர்ந்து பலருடனும் ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நடிகை விந்தியாவுடன் பேச்சுவார்த்தை?
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ள பலரிடமும், ஓபிஎஸ் அணியின் அசைன்மெண்ட் டீம் பேசி வருகிறது. அவர்களில் பலரிடம் இருந்தும் ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருக்கும் நடிகை விந்தியாவுடனும் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனால், அவரும் ஓபிஎஸ் பக்கம் சாய்வாரா என பரபரப்பு எழுந்தது.
மனுஷனா கூட
இந்நிலையில் நடிகை விந்தியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான்.. இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன்.. கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவரா இல்லை, மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓபிஎஸ் அணிக்குத் தாவுவாரா எனும் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.