வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்குது.. தொகுதி வாரியாக கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்!
சென்னை: தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 5 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.
7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1 ஆம் தேதி 57 லோக்சபா தொகுதிகளில் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு முடிந்து, பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிசிடிவி கண்காணிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகளும் அதன் பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.
பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து, பணிகளை மேற்கொள்வது இவர்களின் முதன்மையான பணியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்களான கயனேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் முன்னிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து கடந்த 27ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இதில் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், இணைத்தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காணொளி வாயிலாகக் கலந்து கொண்டனர். சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் சங்கர்லால் குமாவத், இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த், மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications