முழுநேர முனைவர் பட்டப்படிப்புக்கு ஊக்கத் தொகை! ஆதிதிராவிடர் -பழங்குடியினர் நலத்துறை அறிவிப்பு!
சென்னை: முழுநேர முனைவர் பட்டப்படிப்புக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் குறித்து ஆதிதிராவிடர் -பழங்குடியினர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு வழங்கும் ஊக்கத் தொகையுடன் பி.ஹெச்.டி படிக்க விரும்புபவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பாக தங்கள் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரம் வருமாறு;

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம்: திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
கடைசி நாள் டிச. 31: முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள்,"இயக்குநர், ஆதிதிராவிடர் நல ,இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications