"ஓ மை காட்".. அதிமுக வேட்பாளருக்கு வந்த திடீர் சந்தேகம்.. வீடு வீடாக சென்று.. அலறி போன ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் தந்துள்ளார்
சென்னை: ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துவிட்டது.. அதனால் வீடு வீடு சென்று இந்த காரியத்தை செய்துள்ளார்.. இதனால் தேனி மாவட்ட அதிமுகவுக்கு கெட்ட பெயரையே இந்த செயல் தேடி தந்து கொண்டிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில், இந்த முறை அதிமுக வேட்பாளராக களமிறங்கி உள்ளவர் லோகிராசன்..
திமுக வேட்பாளராக மகாராசன், அமமுக வேட்பாளராக ஜெயக்குமார் களமிறங்கி உள்ளனர்.. இவர்களை தவிர, மொத்தம் 20 வேட்பாளர்கள் இதே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
போட்டியாளர்கள்
ஏற்கனவே ஆளும் தரப்பு மீது அதிருப்திகள் நிறைந்துள்ள நிலையில், போட்டியாளர்களும் களத்தில் அதிகம் என்பதால், வாக்காளர்களை சிறப்பாக கவனிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அதிமுக வந்துள்ளது.. அதனால் ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடா பகிரங்கமாகவே நடத்தப்பட்டது.
வாக்காளர்கள்
ஆனால், ஓட்டுப் போடும் தினத்தன்று தங்களுக்கு பணம் எதுவும் வந்து சேரவில்லை என்று பலர் அதிமுக நிர்வாகிகளை மக்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.. ஆண்டிப்பட்டி முழுக்க இதே புலம்பலாக இருந்தது.. இதனால், கலங்கி போன அதிமுக வேட்பாளர் லோகிராசன், யாரையும் நம்பாமல் தானே நேரடியாக வந்து பணப்பட்டுவாடா செய்தார்..
திடீர் குழு
அத்துடன் இந்த விவகாரத்தை அவர் விடவில்லை.. தொகுதிக்குள் சரியாக பணம் ஏன் விநியோகிக்கவில்லை என்று மொத்த பொறுப்பாளர்களையும் திட்டி தீர்த்தார்.. அப்போதும் இந்த விவகாரத்தை அவர் விடவில்லை.. திடீரென ஒரு குழுவை ரெடி செய்து, ஒவ்வொரு தெருவுக்கும் அனுப்பினார்.. ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, பணம் வந்ததா? வாங்கிவிட்டீர்களா? யாரெல்லாம் வாங்கவில்லை என்று புள்ளிவிவரம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்..
ஷாக்
இதை கண்டு வாக்காளர்கள் முதல் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஷாக் ஆனார்கள்... இவ்வளவு காலம் பூடகமாக நடந்து கொண்டிருந்த விஷயம், இப்படி வெளிப்படையாகவே நடக்க ஆரம்பித்துவிட்டதே, எந்த வேட்பாளரும், லோகிராசன் போல டீம் அமைத்து, இப்படி ஒரு காரியத்தை செய்தது இல்லையே என்ற முணுமுணுப்பு தேனி மாவட்ட அதிமுகவில் எழுந்து வருகிறது.