நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி.. அ.தி.மு.க அறிவிப்பு!
சென்னை: சேலம் மேட்டூர் அருகே உள்ள கூளையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது மகன் தனுஷ்(19) நீட் தேர்வு பயம் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே இரண்டு முறை நீட்தேர்வு எழுதி தோல்வி அடைந்தார் தனுஷ்.
Recommended Video
மூன்றாவது முறை நேற்று நீட்தேர்வு எழுத இருந்தார் தனுஷ். ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாமல் போய்விடுவோமோ என்ற பயத்தில் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்து பரிதாபமாக உயிரை விட்டுள்ளார். மாணவரின் இந்த திடீர் முடிவால் தமிழகம் அதிர்ச்சியில் உறைந்தது.
மாணவரின் மரணத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மாணவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.

சிறந்த கல்வி
இது தொடர்பாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக். கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களும்; மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், மாணவ, மாணவியர் அனைவரும் சிறந்த கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாயுள்ளத்தோடு செய்து கொடுத்து, இளைய தலைமுறையினர் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து, நீடித்து வாழ்ந்து வருகின்றனர்.

தற்கொலை
அந்த வகையில், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாணவ, மாணவியரின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதி, கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் திரு. தனுஷ் என்பவர், திமுக-வின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் இந்த அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற இயலாத அரசாக உள்ளதை நாள்தோறும் எண்ணி, மனம் நொந்து வாழ்க்கையில் பல எல்லைகளைக் கடந்து சாதித்து, இந்த நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் மகத்தான மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மாணவன் தனுஷ் தன்னுடைய இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

திமுகதான் பொறுப்பு
அன்னாரின் மரணத்திற்கு திமுக-வும், அதன் அரசும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அன்னாரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், அவரது குடும்பத்திற்கு, அவர் இருந்து ஆற்ற வேண்டிய பணிக்கு ஒப்பாக தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும், அவர்தம் குடும்பம் எந்தவித சிரமமும் இன்றி எதிர்காலத்தைக் கடக்க வழிவகை செய்ய வேண்டும். இந்தத் துயரமான சம்பவத்தைக் கருத்தில்கொண்டு அனைவரையும் தன் கண் எனக் காக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த தனுஷ் அவர்களின் மரணத்திற்கு எதைக் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தபோதிலும், அவர்தம் குடும்பத் துரயத்தில் பங்குபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சிறிய உதவியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போராட்ட குணம் வேண்டும்
எந்தத் துயரம் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி மாண்புமிகு அம்மாவின் வழியிலே பீடுநடைபோட்டு வெற்றிபெற வேண்டும் என்கின்ற போராட்ட குணத்தை மாணவச் செல்வங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக, பெற்றோர்களுக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவச் செல்வங்கள் வழங்கிவிடக் கூடாது என்பதை அறிவுரையாகக் கூறி, தன் இன்னுயிரை நீத்த அன்புச் செல்வம் திரு. தனுஷ் அவர்களின் மறைவிற்கு கழகத்தின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உறுதியையும், வலிமையையும் தரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications