அதிமுக பாஜக கூட்டணி முறிவு.. 8 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. சொல்கிறார் சி.டி.ரவி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே உள்ளன. அதுவரை என்ன நடக்கும் என்று இன்று எதுவும் சொல்ல முடியாது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி கூறியுள்ளார். அண்ணாமலை தலைமையில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக உடன் இனி கூட்டணி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்மொழிந்தார். அதனை ஏற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 100க்கு 100 சதவீதம் ஏகமனதாக அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2024 லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பாஜக தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதும், பட்டாசு வெடித்து கொண்டாடியதும் பெரிய விஷயமல்ல. அதைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை என்று கூறினார்.
பட்டாசு வெடிக்க 10 பேர் போதும். இந்த 2 திராவிட கட்சிகளும் இல்லாமல் நாங்கள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 20 சதவீத வாக்குகள் பெற்றோம். அந்த தேர்தலில் திமுகவை விட 2 சதவீத வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றோம். அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு நஷ்டம் இல்லை என்றார்.
அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு நஷ்டம் இல்லை. இருந்தாலும் கூட்டணியில் இருந்து ஒரு நண்பர் செல்வதை ஐயோ பாவம் என்று பரிதாபப்படலாம். அதிமுக, திமுகவின் கடந்த காலம் சரியல்ல. இவர்களுடைய கடந்த காலம் தெரிந்துதான். இந்த கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்திருந்தோம்.
பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருக்கத்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. கொள்கை ரீதியாக கூட்டணிக்கு சம்பந்தம் இல்லை. அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு லோக்சபா தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. கூட்டணியில் இருந்து அதிமுக சென்றது நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்று சொல்லும்படி உள்ளது. இதை அதிமுக தாமதமாக உணர்வார்கள், அது நடக்கும்.
நாங்கள் ஒட்டி வைக்காவிட்டால் அதிமுக நெல்லிக்காய் மூட்டை. அவர்கள் பெரிய சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம் மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக உள்ளது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக திமுக உள்ளது. அதிமுக எங்கே உள்ளது? அதிமுக இன்றோடு முடிந்தது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, "தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அதுவரை என்ன நடக்கும் என இன்று எதுவும் சொல்ல முடியாது. அண்ணாமலை தலைமையில் தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பாஜகவை பலப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமை என்றும் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications