ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20,000 நிவாரணம் தருக... தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக ரூ.20,000 வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக ரூ.5,000 ஐ வங்கிக்கணக்கு மூலம் அதிமுக அரசு கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.20,000 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய முன் வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வீடுகளில் தண்ணீர் புகுந்ததன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிப்பது அரசின் தலையாய கடமைகளில் ஒன்று என ஓ.பி.எஸ். குறிப்பிட்டுள்ளார். இதேபோல் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின் இணைப்பை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காய்கறிகளின் விலை விஷம் போல் உயர்ந்திருப்பதால் அதனை மலிவு விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் மின்சாரமின்றி இருப்பது என்பது மிகுந்த சிரமத்திற்குரியது என்பதால், இது கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ்.
வெள்ள நிவாரணத் தொகை குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் ஓ.பி.எஸ். இது தொடர்பாக அறிக்கை விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. மின் கட்டணம் செலுத்த அவகாசம் தர வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் விற்க வேண்டும், மழை வெள்ள நிவாரணத் தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.20,000 தர வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளுமே முக்கியமானதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications