அவசரத்தில் பெரிய மிஸ்டேக்.. உடனே சுதாரித்த அதிமுக! பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக புதிய அறிக்கை
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில், பாஜகவில் இருந்து விலகுவதாக தவறாக குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதனை திருத்தி புதிய அறிக்கையை அக்கட்சி வெளியிட்டு உள்ளது.
பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த விமர்சனங்களால் அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்ற குறிப்பிடப்பட்டு இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. அதிமுக என்ற கட்சி பாஜக என்ற கட்சியில் இருந்து எப்படி விலக முடியும் என பலர் கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து பாஜக கூட்டணியில் இருந்து இருந்து விலகுவதாக திருத்தம் செய்து புதிய அறிக்கை அதிமுக தலைமை வெளியிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications