திமுக அரசுக்கு எதிராக ‘அஸ்திரம்’ ஏவும் எடப்பாடி! ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி.. பரபர அறிவிப்பு!
சென்னை : திமுக ஆட்சியில் நிலவி வரும் முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்பாக புகார் தெரிவிக்கும் வகையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று ஆளுநரிடம் புகார் மனு அளிக்கவுள்ளதாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாரயம் குடித்த 22 பேர் அடுத்தடுத்து பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பல ஆயிரம் லிட்டர் கள்ளச் சாரயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராய மரணத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம்தான் ஆறாக ஓடுகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக ஆளுநரிடம் புகார் தெரிவிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நடக்கும் முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்..முதல்வர் ஸ்டாலின் கடும் உத்தரவு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பேரணியாகச் சென்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியிடம் மனு அளிக்கப்படவுள்ளது. வரும் 22 ஆம் தேதி சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்து பேரணியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ரவியிடம் மனு வழங்க உள்ளனர்.
முன்னதாக, விஷச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில், இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? என்பது குறித்து அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications