கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்..முதல்வர் ஸ்டாலின் கடும் உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் சனிக்கிழமை இரவு விஷச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், சுரேஷ், ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான ராஜவேல் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார்.
இதனால், எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் 52 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மெத்தனால் ஆலை உரிமையாளரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். செங்கல்பட்டு அருகே விஷ சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேரின் உயிரை பறித்துள்ளது விஷ சாராயம்.
இதனிடையே தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிப்பதற்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளதை பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரி ஆகியோரின் வாட்ஸ் ஆப் எண்களை அறிவித்து, அதன் மூலம் புகார்களை பெற வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெறப்படும் புகார்களை மதுவிலக்கு காவல்துறை இயக்குநர் கண்காணித்து, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது . காவல்துறை அலுவலர்கள் தங்களின் முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் சிறப்பாகச் செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications