சூடு பிடிக்கும் தேர்தல் களம்... பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக... 3-வது முறையாக வெற்றிபெற வியூகம்..!
சென்னை: அதிமுக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டதால் தமிழக தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர்.
தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று அதிமுக ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்றுக்கொண்டனர்.

முறைப்படி துவக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக தலைமை இன்று முறைப்படி தொடங்கி வைத்திருக்கிறது. இதற்கான பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.க்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விழா மேடை
விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்த முதலமைச்சரிடம் மலர் தட்டு கொண்டு செல்லப்பட்டது. என்ன நினைத்தாரோ அவர் முதலில் நீங்க மரியாதை செலுத்துங்க என அருகில் இருந்த ஓ.பி.எஸ்.சை அழைக்க அவர் முதல் மரியாதை செலுத்தினார். பின்னர் அவரைத் தொடர்ந்து இ.பி.எஸ். எம்.ஜி.ஆர்., ஜெ. படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

50-க்கும் மேற்பட்ட இருக்கைகள்
கட்சி நிகழ்ச்சி என்பதால் அந்த புரோட்டகால்படி ஓ.பி.எஸ்.க்கு இ.பி.எஸ். முன்னுரிமை அளித்தார் எனத் தெரிகிறது. இதனிடையே பிரச்சார மேடையில் 50-க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். இது சற்று வித்தியாசமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.

மூத்த நிர்வாகிகள் பேச்சு
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின் செயல்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும், 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி செய்யும் என அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி போன்றோரும் அதிமுகவை வெற்றிபெற வைப்பதற்கான பிரச்சார உத்திகளை நிர்வாகிகள் மத்தியில் பேசினர்.












Click it and Unblock the Notifications