செந்தில் பாலாஜி ‘பலே’ பிளான்.. தேர்தல் ஆணையம் கண்ணில் மிளகாய்ப்பொடி.. ஜெயக்குமார் பரபர புகார்!
அமைச்சர் செந்தில் பாலாஜி புதுப்புது ஐடியாக்களை யோசிப்பதில் கில்லாடி என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை : எந்த இடைத்தேர்தலிலும் செயல்படுத்தாத ஒரு முறையை இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செயல்படுத்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. டாஸ்மாக் மூலம் பண பட்டுவாடாவை செய்து வருகின்றனர் திமுகவினர் என அதிமுக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்பாகப் பேசினார்.

பிரியாணி - ஆடு மாடு போல
ஜெயக்குமார் கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்து, மூன்று நேரமும் சாப்பாடு, பிரியாணி, பணம் என கொடுத்து வருகின்றனர். சில பகுதிகளில் வாக்காளர்களை சுற்றுலா அழைத்துச் சென்று அவர்களை மனம் மாற்றம் செய்யும் வேலைகளில் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர். கேலிக்கூத்தான, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி கில்லாடி
அமைச்சர் செந்தில் பாலாஜி ரூம் போட்டு சிந்திப்பதில் கில்லாடி. அவரைப் போல புதுப்புது ஐடியாக்களை யோசிக்கும் அமைச்சர் உலகத்திலேயே இருக்க முடியாது. எந்த இடைத்தேர்தலிலும் செயல்படுத்தாத ஒரு முறையை இந்த இடைத்தேர்தலில் செயல்படுத்தி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் 32 - 40 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகையை அந்தந்த டாஸ்மாக் பொறுப்பாளர் அன்றைக்கே வங்கியில் செலுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு மிளகாய்ப்பொடி
அது டாஸ்மாக் நிறுவனத்திற்குச் செல்லவேண்டும். ஆனால், அந்த தொகையை தினந்தோறும் ஒவ்வொரு பகுதிக்கும் அமைச்சரின் ஆள் ஒருவர் சென்று வசூல் செய்து, அந்த பகுதியிலேயே அந்தப் பணத்தை வாக்காளர்களுக்கு பயன்படுத்துவதற்காக வைத்துக் கொள்வார்கள். அதற்குப் பதிலாக, தொகுதிக்கு வெளியே இருந்து அந்தப் பணம் வங்கிக்கு அனுப்பப்பட்டு விடும். இப்படி தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிவிட்டு கில்லாடிகளாக இன்று வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

குறுக்கு வழி
என்னதான், வாக்காளர்களுக்கு திமுக பணத்தை இறைத்தாலும், வாக்காளர்களின் மனம் அதிமுகவை நோக்கியே இருக்கும். திமுக ஆட்சிக்கு எதிரான அலை ஈரோடு கிழக்கு தொகுதியிலும், தமிழ்நாடு முழுக்கவும் இருக்கிறது. இந்நிலையில், மக்களை ஏமாற்ற திமுகவினர் குறுக்கு வழியை கடைபிடித்து வருகிறார்கள். அது வெற்றி பெறாது." என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications