இறுதிமூச்சு இருக்கும் வரை அதிமுக தான் எனது கட்சி.. நெகிழும் கோகுல இந்திரா..!
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விலகுவதாக தகவல் வெளியாகிய நிலையில் அதனை அவர் உறுதியாக மறுத்துள்ளார் .
அதிமுகவில் ஜெயலலிதாவின் நன் மதிப்புக்குரிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கோகுல இந்திரா. அதன் காரணமாக கட்சியின் மகளிர் அணிச்செயலாளர் பொறுப்பு பல வருடங்களாக கோகுல இந்திராவிடம் இருந்தது. மேலும், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை கோகுல இந்திரா ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கோகுல இந்திரா சென்னை அண்ணா நகரில் செட்டிலாகி அரசியல் செய்து வருகிறார். ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவுக்கு சென்ற போது யாதவ சமுதாய பிரதிநிதி கோட்டாவில் கோகுல இந்திராவை கட்சியில் வளர்த்துவிட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் கோகுல இந்திரா அதிமுகவில் தற்போது அமைபுச் செயலாளராக இருக்கிறார். அதிமுக சார்பில் கோகுல இந்திரா மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என அண்மையில் தகவல்கள் உலா வந்து பின்பு பொய்யாகின.
இதனிடையே கடந்த ஒரு வாரகாலமாக அதிமுகவில் இருந்து கோகுல இந்திரா விலகுவதாக தகவல் உலா வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக கூட கூறப்பட்டது.
இது தொடர்பாக கோகுல இந்திராவை நாம் தொடர்பு கொண்டு பேசியதில், தன் உடலில் உயிருள்ள வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்றும், வாட்ஸ் அப், பேஸ்புக், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் யாரோ திட்டமிட்டு வதந்தி பரப்பி வருவதாகவும் கூறினார்.
ஒருநாளும் மாற்றுக்கட்சிக்கு செல்ல வேண்டும் என தான் எண்ணியதே இல்லை என்றும் கோகுல இந்திரா விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications