யார் வேணும்னாலும் லெட்டர் கொடுக்கலாம்.. சபாநாயகர் நாங்க சொல்வதைத்தான் கேட்கணும் - ஜெயக்குமார் கறார்
சென்னை : சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்சித் தலைமையின் முடிவு. சபாநாயகர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துத்தான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியைப் பறித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சபாநாயகருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம், ஆனால் அதிமுகவில் அதிகாரம் படைத்தவர் சொல்வதைத்தான் சபாநாயகர் கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது ஒருவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் அதிகாரிகள் தன்னை கைது செய்யும்போது மனித உரிமைகளை மீறிச் செயல்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

பொய் வழக்கு
அப்போது பேசிய அவர், "கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற்றபோது, திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் ஒன்றுசேர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் வாக்களிக்க வரும்போது, அவர்களை வாக்களிக்க விடாமல் செய்து, காவல்துறை மீது கல் எறிந்து, பொதுமக்கள் மீது கல் எறிந்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து, ஒட்டுமொத்தமாக வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது,வாக்கு சாவடி மையத்தை சூறையாடுவதுபோன்ற அத்தனை வேலைகளையும் செய்தவர்கள்.அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற கழகத்தின் முன்னோடி என்ற அடிப்படையிலே நாங்களும்,எங்கள் கட்சியினரும் எங்கள் கடமையை செய்ததற்கு பரிசு சிறைச்சாலை. பொய் வழக்குகள்.

கொசுக்கடியில் அடைத்தனர்
திமுக அரசு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. என்னை கைது செய்தபோது உடைமாற்றக் கூட அனுமதிக்கவில்லை. நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். மருந்து மாத்திரைகள் எடுக்க அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு மத்தியில் அடைத்தனர். 2 நாட்கள் அங்கேயே வைத்தனர். இப்படி பல ஆண்டுகளாக அரசியலில் உள்ள எனக்கே பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் நடைபெற்றன. எனவே, இதுதொடர்பாக 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தேன்." எனக் கூறினார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர்
தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிப் பேசிய ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். அதனை தற்போது அறிவித்துள்ளனர். கட்சியை பொறுத்தவரையிலே எல்லா நலனும் பாதுகாக்கும் வகையில்தான் கட்சி எந்த முடிவாக இருந்தாலும் நிச்சயமாக எடுக்கும். இதில் எந்த விதமான உள்நோக்கம் யாருக்கும் கிடையாது.

சபாநாயகர் கேட்க வேண்டும்
சபாநாயகர் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துத்தான் ஆக வேண்டும். ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் கடிதம் தரலாம். ஆனால், அதிகாரமும், அங்கீகாரமும் யாரிடம் உள்ளதோ அவர்கள் சொல்வதைத்தான் சபாநாயகர் கேட்க வேண்டும். அதன்படி பார்த்தால் அதிகாரம் படைத்த அதிமுக என்பது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் கையில்தான் அந்த அதிகாரம் உள்ளது. மற்றவர்கள் எழுதிய கடிதம் எல்லாம் அதிகாரம் இல்லாதவர்கள் அனாமதேயமாக எழுதியதாகவே கருதப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உங்களைப் போல பயப்படவில்லை
மேலும், சீரான மின்சாரம் வழங்குவதற்கு திமுக அரசுக்கு வக்கு இல்லை. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், இல்லை என்றால் உங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் அரசு தெரிவித்தது. அதற்காக நாங்கள் பயப்படவில்லை. கட்டணத்தை உயர்த்தவில்லை. மாறாக நாங்கள் சலுகையை அறிவித்தோம். ஆனால், தேர்தல் நேரத்தில் மின் கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என தெரிவித்த ஸ்டாலின் தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். மின்சார கட்டணம் உயர்வால் பொதுமக்கள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

நிர்வாகம் செய்யத் தெரியாமல்
ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ளது. பொருளாதார வல்லுனர்கள் குழு அமைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்கள். அந்த குழு அமைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அவர்கள் தமிழக மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்கள்? அரசு கஜானாவை நிரப்ப அவர்கள் என்ன ஆலோசனை வழங்கினார்கள்? நிர்வாகம் செய்ய தெரியாமல் மின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டு மத்திய அரசு மேல் பழி சுமத்தி வருகின்றனர். திறமையற்ற அரசு இது" எனத் தெரிவித்துள்ளார்.

புளித்துப்போன பதில்
மற்ற மாநிலங்களைப் பார்க்கும்போது தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு என்று அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், "இது கேட்டுக் கேட்டு புளித்துப்போன விஷயம். தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொன்னாரா இல்லையா? பதாகையைப் பிடித்து போராட்டம் செய்தாரா இல்லையா. எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலத்தோடு ஒப்பிடுவது சரியான விஷயம் இல்லை. இந்த அரசாங்கத்திற்கு நிர்வாகத்தைச் சீர்படுத்தி,செம்மைப்படுத்தி நல்ல அளவுக்கு மின்வாரியத்தைக் கொண்டுசெல்வதற்குப் பதிலாகத் திறமையற்ற வகையில் ஆட்சி செய்துவருகிறது என்பது வருத்தத்துக்குரிய கண்டனத்துகுரிய விஷயம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications