கடையை மூடுங்க.. ஜப்பானின் புதிய ரூல்ஸால் கண்ணீர் விட்டு அழுத இந்தியர்! பெரிய சிக்கல்?
டோக்கியோ: ஜப்பானில் வெளிநாட்டவர்களுக்கான குடியேற்ற விதிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள், அங்கு பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 18 ஆண்டுகளாக ஜப்பானில் உணவகம் நடத்தி வரும் இந்தியரான மனிஷ் குமார், புதிய விதிகளால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கண்ணீர் விட்டு அழுத வீடியோ வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.
ஜப்பானில் குடியேற்ற துறை வெளிநாட்டவர்களுக்கான விதிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தொழில் செய்யும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 18 ஆண்டுகளாக உனவு விடுதி நடத்தி வரும் இந்தியரான மனிஷ் குமார், தற்போது நட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மணிஷ் குமார் இது குறித்து கூறியதாவது:-

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பானின் குடியேற்ற சேவை முகமை என்னிடம் எனது நாட்டிற்கே திரும்புமாறு கூறியது. எனது பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களுக்கு ஜப்பானிய மொழி மட்டுமே தெரியும். அவர்களின் நண்பர்கள் ஜப்பானியர்கள் மட்டுமே. ஆனால், இந்தியாவுக்கு திரும்புமாறு எங்களிடம் கூறியுள்ளனர்.
புதிய விசா கிடைப்பது 96 % சரிந்துள்ளது
நான் என்ன செய்வது? டோக்கியோவில் உள்ள சைத்மா பகுதியில் உணவு விடுதி ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறேன். தற்போது மேனேஜர் விசா புதுப்பிப்பு நிராகரிக்கப்பட்டதால் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
ஜப்பானில் சிறிய அளவில் தொழில் நடத்தி வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய குடியேற்ற விதிகளால் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு பிசினஸ் மேனேஜர் விசா முறையில் ஜப்பான் அரசு மாற்றம் கொண்டு வந்தது. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு புதிய விசாக்கள் கிடைப்பது 96 சதவீதம் சரிந்துள்ளது. அதாவது, 1,700-ல் இருந்து 70 ஆக சரிந்துள்ளது.
கடுமையாக்கப்பட்ட விதிகள்
இது தொடர்பாக ஜப்பான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், ஜப்பானில் உண்மையான தொழிலை நடத்தாமல், நீண்டகாலம் தங்குவதற்கான அனுமதி பெறுவதற்கான எளிய வழியாக இந்த விசாவை சிலர் பயன்படுத்துவதை தடுக்கவே கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வணிக மேலாளர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு தொழில் முனைவோருக்கான தகுதி விதிமுறைகளை ஜப்பான் அரசு கடுமையாக மாற்றியுள்ளது. இந்த விசாவிற்கு தேவையான குறைந்தபட்ச மூலதன முதலீட்டு தொகை, முன்பு இருந்த 50 லட்சம் யென் (சுமார் ரூ.30 லட்சம்) என்பதில் இருந்து, 3 கோடி யென் (சுமார் ரூ.2 கோடி) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இந்த விசாவை பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.
முழுநேர பணியாளர் கட்டாயம்
விண்ணப்பதாரர்கள் தற்போது குறைந்தது ஒருவரையாவது முழுநேர உள்ளூர் பணியாளராக வேலைக்கு அமர்த்த வேண்டும். முன்பு, நிர்ணயிக்கப்பட்ட முதலீட்டு நிபந்தனை பூர்த்தி செய்யப்பட்டால் பணியாளர்களை நியமிப்பது விருப்பத் தேர்வாக இருந்தது.
ஜப்பானிய மொழித் திறன் அவசியம்
விண்ணப்பதாரர் அல்லது முழுநேர பணியாளர் ஜப்பானிய மொழித் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ சரிபார்ப்பு கடுமை
வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் மேலாண்மை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது தொடர்புடைய வணிகத் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்றும் புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேடுகளை தவிர்க்க விதிகளில் மாற்றம் என்பது கட்டயாம் என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஜப்பானில் சிறு தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்று கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.














Click it and Unblock the Notifications