பொய் வழக்கிற்கு முடிவு காலம் வரும்! காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!
சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் பதிவதாகவும் இதற்கெல்லாம் விரைவில் முடிவு காலம் வரும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறும் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் அவர் அதிமுக பொதுக்குழுவில் பேசியுள்ளார். காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு என எல்லாமே விலை உயர்வு தான் மக்களுக்கு கொடுக்கப்பட்ட போனஸ் என எஸ்.பி.வேலுமணி விமர்சித்தார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட எல்லா திட்டங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் முடக்கி வருவதாகவும் தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடப்பதால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் எனவும் விமர்சித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றவர் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் விமர்சித்தார்.
திமுகவுக்கு எப்போதுமே வாக்களிக்கக் கூடிய அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கூட இந்த முறை திமுக ஆட்சி வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும் தமிழகத்தில் அரசு ஊழியர்களே திமுக ஆட்சி எப்போது முடியும் எனக் காத்திருக்கும் சூழல் வந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல் மற்றக் கட்சிகளில் சேருபவர்களின் எண்ணிக்கையை விட அதிமுகவில் இணைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது எனக் கூறினார்.
கூட்டணியை பற்றி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கவலைப்பட தேவையில்லை என்றும் அதனை எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொள்வார் எனவும் கூறிய எஸ்.பி. வேலுமணி, நீங்கள் உழைத்தால் மட்டும் போதும் என பொதுக்குழு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். திமுகவினரை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்றும் திமுக ஆட்சி நடப்பதே மீடியாவின் தயவில் தான் எனவும் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications