சட்ட ஆணையர் முன்னிலையிலேயே அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும்..தனியாக நடத்த முடியாது.. ஐகோர்ட் அதிரடி!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும், பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக பொதுக்குழு கூட்டம் நடந்ததாக கூறி, பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேண்டுகோளை ஏற்று புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விசாரணை நடந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்துள்ள தீர்ப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக கூட்டம் கூட்டக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மேலும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சட்ட ஆணையர் பொதுக்குழுவை மேற்பார்வை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.