அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு..இபிஎஸ்சுக்கு தற்காலிக சந்தோஷமே..எண் கணித நிபுணர் கணிப்பு
சென்னை: ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். அப்படித்தான் சாதகமான நாட்களில் நடக்கும் சம்பவங்கள் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு சாதகமில்லாத நாட்கள் காரிய வெற்றியைத் தருவதில்லை. பொன் விழா காணப்போகும் அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தினால் பிளவு பட்டு கிடக்கிறது. ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டமே செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இது தற்காலிகமானதே என்று கணித்துள்ளார் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வம்.
கடந்த ஜூன் 23ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழு கூட்டம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே நாளில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு..எடப்பாடி பழனிச்சாமி அப்பீல் மனுக்கள்..ஹைகோர்ட்டில் நாளை விசாரணை
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுக்குழு இரண்டாவது முறையாக கூடிய நாள் 11/07/2022 என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமில்லாமல்அமைந்து விட்டது.எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் 12/05/1954 கூட்டுக்தொகை 9 வருகிறது. 12 கூட்டுத்தொகை 3 வருகிறது. பொதுக்குழு கூட்டுத்தொகை உள்ள எண் 11 கூட்டுத்தொகை 2 வருகிறது. 11/07/2022 கூட்டுத்தொகை 6. இந்த எண்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற எண்களான 2,6,8 ல் அமைந்ததே பின்னடைவை ஏற்படுத்தியது.
ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வத்தின் பிறந்தநாள் 14/01/1951 முதல் தேதி 14ன் கூட்டு எண் 5 வருகிறது மொத்த கூட்டு எண் 4 வருகிறது. அதிமுக கட்சி தொடங்கப்பட்ட நாள் 17/10/1972 இதன் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமே.
தனி நீதிபதியின் தீர்ப்பு
ஓ.பன்னீர் செல்வம் ஜூலை 11 என்பது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான நாள். எனவே அந்த நாளில் பொதுக்குழு நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் எண் 6 எனவே பொதுக்குழு நடைபெற்ற தேதியின் கூட்டுத்தொகையும் சாதகமாகவே இருந்தது. இந்த சாதகம்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகத்தை தரப்போகிறது எனவும் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்திருந்தார். அது போலவே உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பும் அமைந்தது.
சாதகமற்ற எண்கள்
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேதி, வாக்கு எண்ணிக்கை அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்றதாகவே இருந்தன. இதற்குக் காரணம் அந்த எண்களின் கூட்டுத்தொகை, 6, 2 என வந்ததுதான். எனவே பொதுக்குழுவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற நிலையில் உள்ளது என்றும் கணித்திருந்தார் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன். அவர் கணித்தது போலவே இப்போது உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.
இபிஎஸ் அப்பீல் வழக்கில் தீர்ப்பு
தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. வாத விவாதங்கள் முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இன்றைய தினம் செப்டம்பர் 02, 2022 கூட்டுத்தொகை 02/9/2022 முதல் எண் 02, கூட்டு எண் 17 மொத்தம் 8 வருகிறது. இந்த இரண்டு எண்களுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்றதாக இருக்கிறது என்று கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன். இதனிடையே பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் பட்சத்தில் அவருக்கு சாதகமானதாகவே அமையும் என்றும் கூறியுள்ளார்.
பொன்விழா காணும் அதிமுக
அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகிறது. பொன் விழா காணப்போகும் கட்சியின் தலைமைக்காக நடைபெறும் மல்லுக்கட்டினால் தொண்டர்கள்தான் குழப்பத்தில் உள்ளனர். இதே கட்சியில் நீடிக்கலாமா மாற்றுக்கட்சிக்கு போய் விடலாமா என்று கூட பலரும் யோசிக்கின்னர். சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அனைவரும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அழைக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். அதற்கு உடன்பட மறுக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அக்டோபர் 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்குள் வேற்றுமை மறைந்து ஒற்றுமை அடைய வேண்டும். இல்லாவிட்டால் குழப்பமே நீடிக்கும் என்றும் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன் கூறியுள்ளார்.
அதிமுகவின் எதிர்காலம்
நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அவர் மறைந்து சில ஆண்டுகளிலேயே கட்சியில் தலைமைப்பதவிக்கான மல்லுக்கட்டி வருகின்றனர். பிரிந்திருக்கும் தலைவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் ஒன்றிணையா விட்டால் கட்சியே படிப்படியாக கரைய வாய்ப்பு உள்ளது என்றும் வேறு கட்சி ஒன்று திமுகவிற்கு போட்டியாக முளைக்க வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி கூட வருங்காலத்தில் முன்னேற வாய்ப்புள்ளது என்றும் கணித்துள்ளார் ஜெ.என்.எஸ் செல்வன்.