ஜோதிடர் குறித்த நல்ல நேரம்..தயாரான 23 தீர்மானங்கள் - இபிஎஸ்க்கு சாதகமான "அந்த" தீர்மானம் இருக்கா?
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றுவதற்காக இருபத்தி மூன்று தீர்மானங்களை தயார் செய்துள்ளனர் 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர்.
சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற மல்லுக்கட்டு முடிவுக்கு வராத நிலையில் ஜோதிடர் குறித்துக்கொடுத்த நல்ல நேரத்தில் தீர்மானங்களை தயாரித்திருக்கிறார்களாம் அதிமுக முக்கிய நிர்வாகிகள். அந்த இருபத்திமூன்று தீர்மானங்களில் ஒற்றை தலைமை தீர்மானம் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் கல்யாண மண்டபம் கனஜோராக தயாராகி வருகிறது. கட் அவுட்கள், ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இருபத்தி மூன்று தீர்மானங்களும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இருவரின் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினர் தான் இந்த தீர்மானங்களை தயார் செய்து உள்ளனர்.

ஒற்றைத்தலைமை தீர்மானம்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள இருபத்தி மூன்று தீர்மானங்கள் இல்லாமல் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை தயார் செய்து வைத்துள்ளார்களாம். ஒற்றை தலைமை தனித்தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தயார் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேறும் தீர்மானம்
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானத்தை இன்றைய தினம் அதாவது இருபத்தி ஒன்றாம் தேதியன்று தயார் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்து கொடுத்துள்ளாராம். அதன்படி தான் இன்றைக்கு இருபத்தி மூன்று தீர்மானங்களை தயார் செய்துள்ளார்களாம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகம்
21ஆம் தேதியான இன்றைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தனித் தீர்மானத்தை தயார் செய்தால் எடப்பாடிக்கு அது சாதகமாக அமையும். சுமூகமாக எந்தவித இடையூறும் இல்லாமல் அந்த தனித் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறும் என்று ஜோதிடர் ஒருவர் கணித்துக் கொடுத்திருக்கிறாராம்.

ஜோதிடர் பாலாஜி ஹாசன்
ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது வாட்ஸ் அப் பக்கத்தில் அதிமுக என்ற பெயர் குறிப்பிடாமல் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவிக்காமல் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இன்று காலை 11.10 Am to 11.40 Am வரை சிம்ம லக்னம் லக்கனாதிபதி லாப ஸ்தானத்தில் லக்கனத்திற்கு சனிபகவான் ஏழில் திக் பலம் அடைந்து மூலத்திரிகோண ஆட்சி பெறுகிறார். லக்கினத்திற்கு எட்டில் 9-க்குடையவர் 4 க்கு உடையவர் எட்டில் ஒரு கிரகம் பலமாக இருப்பது. மிகுந்த நன்மை தரக்கூடிய நேரம்.

தொண்டர்கள் ஆதரவு
சூரியன் - தலைமை பொறுப்பை தாங்கும் சக்தி படைக்கக் கூடிய கிரகம். சனி - பொதுமக்கள் , கட்சி ரீதியில் பார்த்தால் அடிப்படை உறுப்பினர்கள். சனி திக்பலம் கொன்ற லக்கனத்தில் ஒரு தலைவர் பொறுப்பை ஏற்றார். நாளடைவில் அந்த தலைவருக்கு ஏகமனதாக தொண்டர்கள் ஆதரவு தருவார்கள் என்று கூறியிருந்தார் ஜோதிடர் பாலாஜிஹாசன். சனி வக்ரம் , வக்ர கிரகம் பார்வை பெற்ற லக்கனத்தில் ஒரு செயல் தொடங்கும் போது அந்தச் செயலை விடாப்பிடியாக பிடிவாதமாக முடிக்கக் கூடிய திறன் ஏற்படும் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்கல் நடக்காது.

சனி சாதகம்
60க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு கட்சியின் சார்பாக , அவருக்கு சாதகமாக தீர்மானம் இந்த நேரத்தில் போடப்பட்டால் உறுதியாக அந்த தீர்மானத்தின் பலனாக சம்பந்தப்பட்டவருக்கு அனேக நற்பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் பாலாஜி ஹாசன். இதுவரை புகழ்பெற்ற அந்தக் கட்சியில் பொன்மனச் செம்மல், அம்மா என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் என்ற வரிசையில் அந்த இடத்தை அடுத்ததாக உறுதி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் பாலாஜிஹாசன்.

ஜோதிடர் கணித்த நேரத்தில் தீர்மானம்
ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துச் சொன்ன அந்த நேரமான 11. 10 முதல் 11. 40 மணிக்குள் இந்தத் தீர்மானத்தை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் தயார் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஒற்றை தலைமை தனித்தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் அது செல்லுபடியாகுமா ஆகாதா என்பது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்கிறார்கள். ஒற்றை தலைமை தனது தீர்மானத்தை கொண்டு வந்தால் அதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. மொத்தத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் மல்லுக்கட்டுக்கு பஞ்சமிருக்காது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ராசி எப்படி?
எடப்பாடி பழனிச்சாமி கன்னி ராசியில் பிறந்தவர் என்றும் அவரது ஜாதகத்தில் சனி துலாம் ராசியில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் விருச்சிக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். தனுசு ராசியில் ராகு, மிதுன ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. கும்ப ராசியில் புதன், மீன ராசியில் சூரியன், சுக்கிரன்,ரிஷப ராசியில் குரு என கிரகங்கள் நிலை உள்ளன. தற்போது புதன் திசை புதன் புத்தி நடைபெறுகிறது. இதுவே அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் வெற்றி தோல்வியை சந்தித்தவர். திடீர் முதல்வரானவர் கடந்த 2017 முதல் 2021 வரை முதல்வராக பதவி வகித்தார் யாரும் குறை சொல்லாத அளவிலேயே பதவி வகித்தார். பவுர்ணமிக்கு அடுத்த நாளில் பிறந்திருக்கிறார். அதுவே இன்றைக்கு நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் ஆதரவு கிடைக்க காரணமாக அமைந்துள்ளது என்கிறது ஜோதிட அமைப்பு.

பொது செயலாளர் பதவி
அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி வகித்தவர் ஜெயலலிதா. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் ஆக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக நிர்வாகிகள் தேர்வு செய்தனர். அந்த யோகம் அவருக்கு சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. நான்கு ஆண்டுகள் சிறை சென்று திரும்பினார். இப்போது ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பொதுச்செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டாலும் எந்த அளவிற்கு யோகத்தை தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications