ADMK Meeting: அதிமுக தற்காலிகத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் இறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமியை எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் களத்தில் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

அதிமுக பிரச்சனை
ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளது. தவெக தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. செங்கோட்டையன் உள்ளிட்ட பல சீனியர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பு பணியை டெல்லி பாஜக தலைமை நேரடியாக செய்து வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக செயற்குழு பொதுக்குழு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடியது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
சென்னை வானகரம் ஶ்ரீவாரு வெகங்டாசலபதி மண்டபத்தில் தற்காலிக அதிமுக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது என்றும், கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்றும், தீவிர வாக்காளர் திருத்த பணியான SIRஐ அதிமுக வரவேற்கிறது என்றும், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications