சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டம்.. உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்துவது ஏன்? ஹைகோர்ட்டில் அதிமுக வழக்கு
சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த மாவட்டங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல்
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன.

தயாராகும் கட்சிகள்
அ.தி.மு.கவை பொறுத்தவரையில் அந்த கூட்டணியில் இருந்த பா.ம.க உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. இந்த 9 மாவட்டங்களுக்கான கூடுதல் தேர்தல் பொறுப்பாளர்களையும் அதிமுக அறிவித்து விட்டது. ஆளும் கட்சியான தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டன.

அ.தி.மு.க எதிர்ப்பு
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுவதற்கு அ.தி.மு.க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒரே கட்டமாக தேர்தலை நடத்துங்கள் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஏற்கனவே மனு அளித்து இருந்தது.

கள்ள ஓட்டு
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ' தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே ஒரே கட்டமாகத்தான் நடைபெறுகிறது. ஆனால் 9 மாவட்டங்களில் மட்டுமே நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, பணப்பட்டுவாடா செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

விரைவில் விசாரணை
எனவே உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் நாங்கள் வைத்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். இதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசு அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications