அண்ணா பல்கலை. வழக்கின் விசாரணை விபரங்கள் தவறுனு டிஜிபிக்கு எப்படி தெரியும்? அதிமுக இன்பதுரை கேள்வி
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பான தகவல்கள் தவறு என டிஜிபி எப்படி கூற முடியும்? எஸ்ஐடிக்கு மட்டுமே தெரிந்த விசாரணை விபரங்கள் டிஐிபிக்கு எப்படி தெரியும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தனது எக்ஸ்வலை பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஊடங்கள் நேற்று வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழக வழக்கு தொடர்பான தகவல்கள் தவறு என டிஜிபி கூறக் கூடாது! தவறாகவே இருப்பினும் எஸ்ஐடிதான் அதை மறுக்க முடியும், டிஜிபி அல்ல!

விசாரணை அதிகாரத்தை 3 பெண் அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில் விசாரணை விபரம் டிஜிபிக்கு எப்படி தெரிந்தது என இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்குள்படுத்தப்பட்டார். அவரது புகாரின் பேரில் ஞானேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை நடத்திய போது அங்கிருந்து லேப்டாப், பென் டிரைவ், சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து, தமிழக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: " சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, சென்னை அண்ணா நகர் துணை ஆணையாளர் மருத்துவர் புக்யா சினேஹா இகாப தலைமையில் அனைத்து மகளிர் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டது இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இவ்வழக்குகளில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் / முன்னேற்றங்கள் எனக் கூறி சில கருத்துக்களை பொதுவெளியில் ஒளிபரப்பி/பிரசுரித்து வருகின்றன. குறிப்பாக எதிரி ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவானது. பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் திருப்பூரை சேர்ந்த ஒரு நபரும் இதில் எதிரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட ஆதாரமற்ற தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
எனினும், இவ்வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எந்த ஒரு அறிக்கையோ கருத்தோ எந்த ஒரு தனிநபருக்கோ அல்லது ஊடகத்திற்கோ தெரிவிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. இவ்வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவையாகும்.
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகைய ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும். இவ்வழக்குகளின் தீவிரதன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஊடகங்கள், தனி நபர்கள், சமூக ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிடுவதை தவிர்த்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தவறு என எஸ்ஐடிதானே மறுக்க வேண்டும், தமிழக டிஜிபி மறுப்பது எப்படி என இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications