யாருப்பா இவரு? காரைக்கால் மின்தடைக்கு திமுகவை விமர்சித்த அதிமுக லீடர்- பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்!
சென்னை : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மின்வெட்டு ஏற்பட்டதற்கு தமிழக அரசை விமர்சித்து ட்வீட் செய்த அதிமுக ஐடி விங் மாவட்ட தலைவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
கரூர் மாவட்ட அதிமுக ஐடி விங் தலைவரான பசுபதி செந்தில் என்பவர், காரைக்காலில் மின்வெட்டு ஏற்பட்டது பற்றிய செய்தியைப் பகிர்ந்து, தமிழக அரசை விமர்சித்திருந்தார்.
அதற்கு, காரைக்கால் எந்த மாநிலத்தின் கீழ், யார் ஆட்சியின் கீழ் வருகிறது என்பதை நன்றாக உறுதி செய்து ட்வீட் போடுங்க என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் மின் வெட்டு
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாகவே ஆங்காகங்கே மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்க புதுச்சேரி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மின் வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்கால் முழுவதும்
இந்நிலையில் நேற்று இரவும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. காரைக்கால் மாவட்டம் முழுவதும் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மின் தடை ஏற்பட்டது. இதனால் காரைக்கால் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீப்பந்தம் ஏந்தி பல்வேறு இடங்களில் சாலைகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இனி விடியாது தமிழகம்?
இந்நிலையில்தான், காரைக்காலில் தொடர் மின் தடை ஏற்பட்டது குறித்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, "இனி விடியாது தமிழகம்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் 2 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் மின்தடை" என தமிழகத்தை ஆளும் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி பசுபதி செந்தில் பதிவிட்டார்.

அதிமுக நிர்வாகி
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் கரூர் மாவட்ட தலைவராக இருக்கும் பசுபதி செந்தில், தொடர்ச்சியாக திமுக அரசை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில்தான் காரைக்காலில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து, விடியல் ஆட்சி எனக் கூறும் திமுக அரசை விமர்சித்து 'இனி விடியாது தமிழகம்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கிண்டல்
என்.ஆர். காங்கிரஸ் - பாஜக - அதிமுக கூட்டணியில் வென்று முதல்வரான ரங்கசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில் ஏற்பட்ட மின் தடைக்கு தமிழக அரசை அவர் விமர்சித்த நிலையில், "காரைக்கால் எந்த மாநிலத்தின் கீழ், யார் ஆட்சியின் கீழ் வருகிறது என்பதை நன்றாக உறுதி செய்து ட்வீட் போடுங்க" என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications