"திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் நாடு நன்றாக இருக்காது".. அதிமுகவின் கல்யாண சுந்தரம் பேட்டி
அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் பேட்டி தந்துள்ளார்
சென்னை: "திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான நிலைப்பாடு எனக்கு இருக்கிறது.. அப்படி இருந்தாலும், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடிமட்ட தொண்டனையும் உயரத்தில் அமர வைப்பது அதிமுக. அதனால்தான் இந்த கட்சியில் இணைந்துள்ளேன்" என்று அதிமுகவில் இணைந்துள்ள பேராசிரியர் கல்யாணசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் பேராசிரியர் கல்யாண சுந்தரம்.. இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்சியிலிருந்து விலகினார்... அதேபோல் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியும் கட்சியிலிருந்து விலகினார்.
இவர்கள் 2 பேருமே நாம் தமிழர் கட்சியின் மிக முக்கியமானவர்கள்.. இதுவரை இந்த கட்சியில் இருந்து யாருமே விலகாத சூழலில், ஒரே நேரத்தில் 2 பேர் விலகியது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது. அதேசமயம், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
விலகல்
இவர்கள் 2 பேரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும், என் சாவை எதிர்நோக்கி காத்திருந்தவர் தான் கல்யாண சுந்தரம் என்றும் சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. அதுமட்டுமல்ல, கட்சியிலிருந்து 2 பேர் வெளியேறினால் ஒன்றும் பிளவு பட்டு விடாது, தன்னை ரெண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் என்றும் சொல்லி இருந்தார்.
அதிமுக
இதையடுத்து, கல்யாண சுந்தரம், அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் கல்யாணசுந்தரம் கட்சியில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் தந்தார். அப்போது அவர் சொன்னதாவது:
தமிழர்கள்
"தமிழகத்திற்கு எதிரான எந்த திட்டங்களையும் செயல்படுத்தாது என்ற நம்பிக்கையில் அதிமுகவில் இணைந்திருக்கிறேன். ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காக செயல்படக்கூடிய ஒரே கட்சி அதிமுகதான். நாளை கலைந்து விடும், நாளை கலைந்துவிடும் என்று சொன்ன இந்த அரசு 4 வருடத்தை சாதித்துள்ளது.. திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான நிலைப்பாடு எனக்கு இருக்கிறது.
திமுக
அப்படி இருந்தாலும், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அடிமட்ட தொண்டனையும் உயரத்தில் அமர வைப்பது அதிமுக. திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் நாடு நன்றாக இருக்காது" என்றார். பின்னர், சீமான் மீது விஜயலட்சுமி சொல்லும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என்று கல்யாண சுந்தரம் கூறினார்.. சீமானுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் அண்ணன் இல்லை" என்றார்.