"இளங்கோவன் பெரியார் பேரனா.. பெரியார் ஆத்மா அவரை நிச்சயம் மன்னிக்காது!" டென்ஷனான தம்பிதுரை! என்னாச்சு
ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிமுக எம்பி தம்பிதுரை கடுமையாகச் சாடி பேசினார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் அங்குத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, பெரியார் ஆத்மா நிச்சயம் ஈவிகேஎஸ் இளங்கோவனை மன்னிக்காது என்று சாடினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.. இதையடுத்து அமைதியாக இருந்த அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சியே களமிறங்கியது.. அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஈரோடு கிழக்கு
அதிமுக தரப்பில் முதலில் யார் போட்டியிடுவார்கள் என்பதில் குழப்பமே நிலவியது. இப்போது அதிமுக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று இரு பிரிவுகளாக உள்ளது அனைவருக்கும் தெரியும். இரு தரப்பும் தாங்கள் தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்தனர். எடப்பாடி தரப்பு தென்னரசுவையும் ஓபிஎஸ் தரப்பு செந்தில் முருகனையும் வேட்பாளர்களாக அறிவித்தனர். இருவரும் இரட்டை இலை கோரியதால் சின்னம் முடங்கும் சூழல் உருவானது.

அதிமுக
கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலும் எடப்பாடி தரப்புக்கே ஆதரவு தெரிவித்தன. பாஜக கூட எடப்பாடி தரப்பு போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட் சொன்ன நிலையில், எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுவது உறுதியானது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மட்டுமின்றி அமமுக வேட்பாளரும் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் செம ஹேப்பியில் இருக்கிறது எடப்பாடி தரப்பு.

புகார்கள்
இதே உற்சாகத்தில் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. எடப்பாடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் ஈரோடு கிழக்கில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இது ஒரு பக்ககம் இருக்க.. ஈரோடு கிழக்கு வாக்காளர் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஏற்கனவே, பல தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஈரோட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனை அலுவலகங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தம்பிதுரை
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, "சமூக சீர்திருத்தமே முக்கியமான ஒன்று என்பது உறுதியாக இருந்த பெரியார். இதன் காரணமாகவே அவர் தேர்தல் அரசியலில் இருந்தும் முற்றிலுமாக ஒதுங்கி இருந்தார். சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிக்க வேண்டும். அனைவரும் சமம். பெண்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்பதற்காக சமூக சீர்திருத்த பணிகளை அவர் ஆற்றினார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிடவே இல்லை.

பெரியார் ஆத்மா மன்னிக்காது
அதேநேரம் அவரது பேரன் என்று சொல்லிக் கொள்ளும் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.. அவர் பதவிக்காகக் காங்கிரஸில் சேர்ந்து அமைச்சரானார். அத்துடன் நில்லாமல், மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார். இப்போது மீண்டும் தேர்தலில் வேறு போட்டியிடுகிறார். அவரை நிச்சயம் பெரியார் ஆத்மா மன்னிக்கவே மன்னிக்காது" என்று அவர் கடுமையாகச் சாடினார்.

பாஜக பிரசாரம் செய்யவில்லையா
அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடங்கி பலரும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இருப்பினும், பாஜக தலைவர்கள் யாரும் அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "பாஜக பிரச்சாரம் செய்யவில்லை என்பதில் உண்மையில்லை. எடப்பாடி பழனிசாமி சொன்னது போல, பாஜகவுடன் கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications