ரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. "காலா ஆதரவு கழகத்துக்கே" என புளகாங்கிதம்
Recommended Video

சென்னை: "காலா ஆதரவு கழகத்துக்கே" என்று ரஜினியை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து 'நமது அம்மா' ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது
ரஜினியை அதிமுக கொஞ்ச நஞ்சம் விமர்சிக்கவில்லை.. எக்கச்சக்கமாகவே விமர்சித்து வாயில் போட்டு கொண்டு வந்துள்ளது.
"ரஜினி ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.. பார்ட் டைம் அரசியல்வாதி... அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி" என்றெல்லாம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். செல்லூர் ராஜூ ஒரு கட்டத்தில்போய், "ரஜினி ஒரு வியாபாரி... இன்னைக்கு ஒன்னு பேசுவார்.. நாளைக்கு ஒன்னு பேசுவார்" என்று கொந்தளித்தே விட்டார்.

போயே போச்சு!
ஆனால் இதெல்லாம் இப்போது ரஜினி விடுத்த ஒரு பேட்டியில் போயே பேச்சு.. போயிந்தி.. இட்ஸ் கான்! பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு ரஜினி பாராட்டி கருத்து சொன்னதும்.. அதற்கு அதிமுக மானாவாரியாக புகழ்ந்துள்ளது.

வாழ்த்து
இதற்கு தங்களது அதிகாரப்பூர்வ நாளேடான "நமது அம்மா"வில் காலா ஆதரவு கழகத்துக்கே என்று சொல்லி ஒரு வாழ்த்தையும் வெளியிட்டுள்ளது. அதில் சொல்லி இருப்பதாவது:- "பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த். இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.

வீராணம் திட்டம்
125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

கோதாவரி ஆறு
இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை
இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்

காலா ஆதரவு
இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே ‘காலா' ஆதரவுகழகத்துக்கே என 'நமது அம்மா' நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications