என்ன நடக்கிறது அதிமுகவில்...? அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து இரு அமைச்சர்கள் நீக்கம்
சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் சிவி சண்முகம் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுவிட்டனர். அதற்கு பதில் அவர்களுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் ஆர்.லட்சுமணன் எம்.பி.யும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆர்.லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக க.பொன்னுசாமியும், ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக ஆர்.வி.என்.கண்ணனும், துணை செயலாளராக கே.சேதுராமானுஜமும், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராக பி.கருணாகரனும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் பெருமாள் நகர் மு. ராஜன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்டக் கழக அமைப்புகள் பின்வருமாறு திருத்தி அமைக்கப்பட்டு கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இன்று முதல் செயல்படும்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
1. கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி (64)
2. போளூர் சட்டமன்றத் தொகுதி (66)
3. செய்யார் சட்டமன்றத் தொகுதி (68)
4. வந்தவாசி (தனி) சட்டமன்றத் தொகுதி (69)
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
1. ஆரணி சட்டமன்றத் தொகுதி (67)
2. செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதி (62)
3. திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி (63)
4. கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி (65)
இதன் அடிப்படையில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக தூசி மு. மோகன், எம்.எல்.ஏ ( செய்யார் சட்டமன்றத் தொகுதி ) திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.