ரூ.1000 கொடுப்பீங்களா? நீங்க செல்போன் கொடுத்தீங்களா? சட்டசபையில் அதிமுகவுக்கு திமுக பதில் கேள்வி
சென்னை: திமுக தனது தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்தது. தற்போது வரை ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமி சட்டசபையில் இன்று, ‛‛குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே. அந்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று ?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 2016 இல் பெண்களுக்கு செல்போன் தருகிறேன் என்று சொன்னீர்களே இன்றுவரை கொடுத்துள்ளீர்களா? என பதில் கேள்வி எழுப்பியது வாதத்தை கிளப்பியது.
2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்என் ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்என் ரவி அச்சிடப்பட்டு வழங்கிய அரசின் உரையில் சிலவற்றை படிக்காமல் விட்டார். அதோடு கூடுதலாக சில விஷயங்களை சுயமாக அவர் சேர்த்து படித்தது.
இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து சட்டசபையிலேயே முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு வழங்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் உள்ள அம்சங்களை மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் இல்லாமல் ஆளுநர் ரவி குறிப்பிட்ட விஷயங்களை அவை குறிப்பில் இடம்பெற செய்யக்கூடாது தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

3வது நாள் கூட்டம் துவக்கம்
இதையடுத்து நேற்று 2ம் நாள் கூட்டத்தொடரில் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இன்று 3வது நாள் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு இன்னும் முடிவு எடுக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

ரூ.1000 வாக்குறுதி என்னவாயிற்று?
3வது நாளான இன்று சட்டசபையில் சபை நடவடிக்கைகள் துவங்கின. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு விவாதங்கள் தொடங்கின. ஆளும் கட்சியிடம் எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பினர். இந்த வேளையில், அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமி, ‛‛குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே. அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? என கேள்வி எழுப்பினார்.

செல்போன் கொடுத்தீர்களா? என கேள்வி
இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு பதிலளித்தார். அப்போது, ‛‛2016ல் பெண்களுக்கு செல்போன் தருவதாக சொன்னீர்களே. இன்று வரை கொடுத்துள்ளீர்களா?'' என அதிமுக எம்எல்ஏ கேபி முனுசாமியை பார்த்து பதில் கேள்வி எழுப்பினார்.

2 ஏக்கர் நில வாக்குறுதி
இருப்பினும் விடாத கேபி முனுசாமி, ‛‛அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என கருணாநிதி சொன்னாரே செய்தீர்களா?'' என கேட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு குறுக்கீட்டு பதில் அளித்தார். அப்பாவு கூறுகையில், ‛‛ கருணாநிதி சொன்னபடி 20 லட்சம் பேருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார். மேலும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறும்போது, ‛‛நிலமற்ற ஏழைகளுக்கு அரசு சார்பில் திமுக ஆட்சியில் நிலம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் நிலத்தை அபகரித்தது எந்த அரசு என்பது அனைவருக்கும் தெரியும்'' என அதிமுகவை சாடினார்.

நீட் தேர்வு ரகசியம் என்னவாயிற்று?
இதையடுத்து கேபி முனுசாமி, ‛‛நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அம்சம் பாக்கெட்டில் இருப்பதாக சொன்னீர்களே அந்த ரகசியம் என்னவாயிற்று?'' என கேள்வி எழுப்பினார். இதற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‛‛100 கோடி ரூபாய் செலவில் தமிழ் தாய்க்கு சிலை வைப்பதாக சொன்னீர்களே செய்தீர்களா?'' என பதில் கேள்வி எழுப்பினார். இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அதிமுக, திமுகவினர் கேள்விகள் தொடர்ந்து எழுப்பினர்.












Click it and Unblock the Notifications