என்னது நவாஸ் கனி வேட்பாளரா.. அதிமுகவில் 2 பேருக்கு தூக்கி வாரி போட்டிருக்காமே!
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அதிமுகவும், பாஜகவும் போட்டி போட்டு வருகின்றன.
சென்னை: ராமநாதபுர தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக நவாஸ்கனி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிமுகவில் 2 பேருக்கு தூக்கி வாரி போட்டிருக்கிறது! மேலும் தொகுதியை பிடிப்பது யார் என்று அதிமுக கூட்டணியில் போட்டியும் புகைச்சலும் ஆரம்பமாகி உள்ளதாம்!
கொஞ்ச நாளாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் கோஷ்டி பூசல் நிலவியது. மத்திய அமைச்சர் அன்வர் ராஜா மற்றும் அமைச்சர் மணிகண்டன்.
இவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. அது மட்டுமின்றி இருவருமே இந்த தொகுதியில் போட்டியிட அதிமுகவை நெருக்கி கொண்டிருந்தார்கள்.
கூட்டணி கட்சி
அதனால் இந்த முறை பேசாமல் இவங்க ரெண்டு பேரையும் நிறுத்துவதைவிட கூட்டணி கட்சியான பாஜகவுக்கே தொகுதியை ஒதுக்கலாம் என அதிமுக முடிவு செய்ததாம். இதனிடையே பாஜகவும் ராமநாதபுரம் தொகுதியை கேட்டிருக்கிறது.
நயினார் நாகேந்திரன்
"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக ஆட்சி" என்ற சென்ட்டிமென்ட்டுக்காக பாஜக இப்படி பிளான் செய்தது. அதனால் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், குப்புராமு இவர்கள் இருவரில் ஒருவரை நிறுத்தவும் யோசித்து வருகிறது.
அன்வர் ராஜா
ஆனால் நேற்று திமுக கூட்டணியில் நவாஸ்கனி அறிவித்ததும் தூக்கி வாரிபோட்டிருக்கிறது அன்வர் ராஜாவுக்கும், அமைச்சர் மணிகண்டனுக்கும். அதனால் எலியும் பூனையுமாக இருந்த இவர்கள் இருவரும் நட்பு வலை வீசிவருகிறார்களாம். "எங்களுக்குள் இனி சண்டை இருக்காது, கோஷ்டிபூசல் இருக்காது" என தலைமையிடமும் இருவரும் உறுதி தருகிறார்களாம். இதற்கு காரணம், அதிமுகவை தவிர பாஜகவுக்கு தொகுதி போய்விடக்கூடாது என்பதால்தான்!
அதிமுக திட்டம்
உடனே அதிமுகவும், "திமுக கூட்டணியால் அறிவிக்கப்பட்ட நவாஸ் கனி புது வேட்பாளர். அதுவும் திமுகவை நம்பி களம் இறங்குபவர். அதனால் அதிமுக ஈஸியாக ஜெயிக்கக்கூடிய ராமநாதபுரத்தை பாஜகவுக்கு போய் ஒதுக்குவதா? பேசாமல் நாமளே களம் இறங்கலாமே" என கணக்கு போடுகிறதாம்.
தொண்டர்கள் ஏக்கம்
ராஜ கண்ணப்பன், அன்வர்ராஜா என யார் நின்றாலும் வெற்றி பெற எளிதாக வாய்ப்புள்ளதால், பாஜகவுக்கு ஏன் இந்த தொகுதியை தர வேண்டும் என அதிமுக தொண்டர்களும் ஏக்கமாக கேட்கிறார்களாம். இதையெல்லாம் அறிந்த அதிமுகவோ, ராமநாதபுரத்தில் நாங்களே போட்டியிடுகிறோம், எங்களுக்கே அந்த தொகுதி என்று பாஜக தலைமையிடம் மல்லுக்கட்டி வருகிறதாம்!