திமுக பாணியை கையிலெடுக்கும் அதிமுக... வழக்கறிஞர் அணியை வலுவாக கட்டமைக்க திட்டம்
சென்னை: திமுகவின் வழக்கறிஞர் அணியை போல் அதிமுகவிலும் அந்த அணியை வலுவாக கட்டமைக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் திமுக சார்பில் தொடரப்படும் அனைத்து வழக்குகளிலும், ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டு ஆதாரங்கள் உரிய முறையில் சமர்பிக்கப்படும்.
அதிமுகவில் ஆரம்பம் காலம் முதலே வழக்கறிஞர் அணி சொதப்பி வருவதால் அக்கட்சிக்கும், ஆட்சிக்கும் நீதிமன்றங்களில் குட்டு விழுவது தொடர்கதையாக உள்ளது.

திறமைசாலிகள்
திமுகவில் உள்ள சார்பு அணிகளில் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி வரிசையில் வழக்கறிஞர் அணியும் பிரதான இடத்தில் இருக்கிறது. கட்சிக்கு வழக்கறிஞர் அணி என்பது இன்றியமையாத ஒன்று என உணர்ந்த கருணாநிதி, அந்த அணியை சேர்ந்த திறமைசாலிகளுக்கு உரிய கவுரவம் வழங்கி வந்தார். இப்போது மு.க.ஸ்டாலினும் அதேபோல் வழக்கறிஞர் அணியை சேர்ந்த பிரமுகர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

அர்ப்பணிப்பு
திமுகவில் சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.பாரதி, கிரிராஜன், வில்சன், என்.ஆர். இளங்கோ, பரந்தாமன், உள்ளிட்ட இன்னும் பல வழக்கறிஞர்கள் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கக் கூடியவர்கள். மு.க.ஸ்டாலினின் எண்ண ஓட்டத்திற்கேற்ப செயல்பட்டு, கட்சி ரீதியாக முன்னெடுக்கும் ஒவ்வொரு வழக்கிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடக்கூடியவர்கள். இவை அனைத்திற்கும் காரணம் வருமானத்திற்கு அப்பாற்பட்டு ஸ்டாலின் அளிக்கும் ஊக்கமும், உற்சாகமும், நேரடி தொடர்பும் தான்.

சொதப்பல்கள்
இதனிடையே திமுக வழக்கறிஞர் அணியின் நடவடிக்கைகளை கவனிக்கும் அதிமுக தலைமை, தங்கள் கட்சியிலும் வழக்கறிஞர் அணியை வலுவாக கட்டமைக்க நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ஆஸ்தான வழக்கறிஞராக திகழ்ந்த ஜோதி, இருக்கும் இடம் தெரியாமல் ஒதுக்கிவைக்கப்பட்டார். தற்போதைய சூழலில் மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் என ஒன்றிரண்டு பேர் மட்டுமே அதிமுகவில் அடையாளம் காணப்படக் கூடிய வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். . இவர்களுடைய வேகமும் பெரியளவில் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.

நுணுக்கமான முறை
இன்னும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற ஓராண்டு மட்டுமே உள்ளதால், அதற்குள் அதிமுகவில் வழக்கறிஞர் அணியில் பல மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளது அதிமுக தலைமை. நுணுக்கமாக வழக்குகளை கையாள தெரிந்த நபர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு பொறுப்புகள் வழங்க முடிவெடுத்துள்ளாராம் இ.பி.எஸ்..












Click it and Unblock the Notifications