மிரட்டும் மின்வெட்டு! கொதிக்கும் மக்கள்! ஆர்ப்பாட்டம் நடத்தும் ஐடியாவில் அதிமுக! அடுத்தது என்ன?
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக மின் வெட்டு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மத்தியில் ஒரு கொதிநிலை உருவாகியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
குறிப்பாக தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டசபையில் சவால் விடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய பிறகு தான் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மின்வெட்டு விவகாரத்தை மையமாக வைத்து தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் ஐடியாவை வகுத்து வருகிறது.

மின் வெட்டு
தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த 4 நாட்களாகவே நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கு குறையாமல் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களை காட்டிலும் ஊரகப்பகுதிகளில் இந்தப் பிரச்சனை அதிகம் உள்ளது. குறிப்பாக மாணவர்கள் பள்ளி முடித்து வீடு திரும்பும் நேரங்களிலும், மாலை வீட்டுப்பாடம் படிக்கும் நேரங்களிலும், இரவு தூங்கும் நேரங்களிலும் மின்தடை செய்யப்படுகிறது.

கிராமப்புறங்கள்
மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வரவில்லை என என்னதான் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தாலும் கூட அதை கிராமப்புற மக்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதனிடையே போதாகுறைக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கோடைக்காலத்திற்கான முறையான முன்னேற்பாடுகளையும், திட்டமிடலையும் மின்சாரத்துறை செய்யவில்லை என குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்
இதனால் இந்தப் பிரச்சனை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போர்க்கால அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய அவரும் ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மின் வெட்டை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறதாம்.
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அடிக்கடி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என நடத்தி கட்சியை ஆக்டிவாக வைத்திருந்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் இன்று தாமும் அதேபோல் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி கட்சியை ஆக்டிவாக வைத்துக் கொள்வதுடன் மின் வெட்டு விவகாரத்தில் மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்யவும் திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே சட்டசபை நடைபெற்று வருவதால் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் அதிமுக மேலிடத் தரப்பில் எடுக்கவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications