கோவளம் தர்ஹாவுக்கு சென்ற அதிமுக அவைத்தலைவர்! புரோட்டகால் படி உற்சாக வரவேற்பு தந்த கட்சியினர்!
சென்னை: அதிமுக அவைத்தலைவராக அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் சென்னையை அடுத்துள்ள கோவளம் தர்ஹாவில் சிறப்பு துஆ வழிபாடு நடத்தினார்.
கட்சியின் புரோட்டகால் படி கோவளம் பகுதிக்கு தமிழ்மகன் உசேன் செல்லும் தகவல் முன்கூட்டியே மாவட்டச் செயலாளர் மூலம் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டதால் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இத்தனை நாட்களாக தற்காலிக அவைத்தலைவராக மட்டுமே இருந்த தமிழ் மகன் உசேனுக்கு கடந்த 23-ஆம் தேதி அவைத்தலைவர் பதவி உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
தெரியாமல் செய்த தப்பு.. சட்ட சிக்கலில் மாட்டிய எடப்பாடி.. ஓபிஎஸ் கையில் 8 அஸ்திரம்! வெலவெலத்த அதிமுக
தமிழ்மகன் உசேன்
அதிமுக அவைத்தலைவர் பதவிக்கு அக்கட்சியின் சீனியர் நிர்வாகியான தமிழ் மகன் உசேன், முறைப்படி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதிமுகவில் அவைத்தலைவர் பதவி என்பது மிக உயர்ந்த பதவியாக பார்க்கப்படுகிறது. தேர்தலின் போது வேட்பாளர் நேர்காணல் உள்ளிட்ட கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகள் எடுக்கும் நிகழ்வுகளிலும் இந்தப் பதவியின் ரோல் மிக மிக அவசியமாகும்.
பல சிறப்புகள்
இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்தப் பதவியில் எம்.ஜி.ஆர்.கால அதிமுககாரரான தமிழ் மகன் உசேன் அமர வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கோவளத்தில் உள்ள தமீம் அன்சாரி தர்ஹாவுக்கு சென்று மலர் போர்வை அணிவித்து சிறப்பு து ஆ வழிபாடு நடத்திய தமிழ் மகன் உசேனுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இதற்கு முன்பு பலமுறை கோவளம் தர்காவுக்கு தமிழ்மகன் உசேன் சென்றிருந்தாலும் கூட அப்போதெல்லாம் இது போன்ற வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை.
முதல்முறையாக
அதிமுக அவைத்தலைவர் இவர் தான் என பொதுக்குழுவில் முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டதால் மாலை மரியாதைகள் தமிழ்மகன் உசேனை தேடிவரத் தொடங்கியுள்ளது. நாகூர், ஏர்வாடி, வரிசையில் கோவளம் தர்ஹாவும் இஸ்லாமியர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக பார்க்கப்படுகிறது. இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பலரும் அந்த தர்ஹாவுக்கு சென்று வருவது வழக்கமாகும்.
எளிய பின்னணி
தமிழ் மகன் உசேன் இதுவரை ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது காரில் பயணித்து வருகிறார். அவர் பயணிக்கும் இன்னோவா கார் கட்சி சார்பில் வழங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் ஹவுசிங் போர்டு வீட்டில் தான் அவர் இன்னும் வசித்து வருகிறார் என்பது கூடுதல் தகவலாகும்.