தப்பிப்பாரா ரவீந்திரநாத்? அதிமுகவின் ஒரே லோக்சபா எம்.பிக்கு சிக்கல்? தீர்ப்பு வெய்ட்டிங்!
சென்னை : அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத், தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என ஓபிஎஸ் தரப்பு பதற்றத்தில் உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்தத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு : ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணப் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை ஏற்கக்கூடாது என்றும், வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு : அதனைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
அதன்பின்னர் இரு தரப்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்து வந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒத்திவைத்தார்.
அதிமுக மோதல் : அதிமுகவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுகவின் ஒரே மக்களவை எம்.பி ஆவார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சென்ற ஆண்டே மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிசாமி, எனினும் ரவீந்திரநாத் அதிமுக எம்.பியாகவே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் வழக்கு தீர்ப்பால் ரவீந்திரநாத்துக்கு சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் இருக்கிறது ஓபிஎஸ் அணி.












Click it and Unblock the Notifications