கூட்டணிக்காக கவலைப்படுபவர்கள் நாங்கள் அல்ல... அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் திட்டவட்டம்
சென்னை: கூட்டணியை பற்றி எந்தக் காலத்திலும் அதிமுக கவலைப்பட்டதில்லை என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
யார் வந்தாலும் யார் பிரிந்தாலும் அதிமுகவுக்கு கவலைகிடையாது என்றும், அது அவரவர் எடுக்கும் சொந்த முடிவுகள் எனவும் பொன்னையன் கூறியுள்ளார்.
தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிமுக வலிமை
தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக அளவுகடந்த வலிமை மிக்க கட்சி என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வென்றதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி பாஜக தரப்பில் அதிருப்தி தெரிவித்தது பற்றி தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்று அவரிடம் பிரத்யேகப் பேட்டி கேட்டிருந்தது. அதில் பேசிய அவர் அதிமுக கூட்டணியை நினைத்து கவலைப்படும் கட்சி அல்ல என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

வருத்தம் அளிக்கிறது
கந்த சஷ்டி விவகாரம் மற்றும் கோயில் சேதப்படுத்தப்பட்ட விவகாரங்களில் ஆதாரத்தின் அடிப்படையில் தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதை புரிந்துகொள்ளாமல் அதிமுக அரசை கேவலப்படுத்தும் வகையில் பாஜகவினர் பேசுவது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும் கூறியுள்ளார். மத உணர்வை யார் புண்படுத்தினாலும் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது எனவும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி வேறு
தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு என்றும், அந்த வகையில் அதிமுக கொள்கை வேறு பாஜக கொள்கை வேறு எனவும் பொன்னையன் தெரிவித்துள்ளார். கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் வரவேண்டும், இவர்கள் வரவேண்டும் என எந்தக் காலத்திலும் அதிமுக அணுகியதில்லை எனக் கூறினார். மேலும், உண்மையின் அடிப்படையில் தான் எந்தக் கருத்தையும் அரசியல் கட்சிகள் பேச வேண்டுமே தவிர ஏதோ ஒரு யூகத்தின் அடிப்படையிலோ, உள்நோக்கத்தின் அடிப்படையிலோ பேசக்கூடாது என எச்சரித்துள்ளார்.

பாஜகவில் சிலர்
கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் அதிமுக அரசு மீது உள்நோக்கத்தோடு ஏதோ ஒரு அஜெண்டாவை மனதில் வைத்துக்கொண்டு பாஜகவில் சிலர் பேசுவது அவர்களுக்கு தான் பாதகமாக முடியும் என்பதை உணர்ந்திருப்பார்கள் என தாம் நம்புவதாகவும், தமிழகத்தில் மத துவேசத்திற்கு இடமில்லை எனவும் பொன்னையன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications